பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்

431



இந்து சமயத்தில் வேதங்கள் அன்பினையே மையமாகக் கொண்டு வாழ்க்கை நெறியை விளக்குகின்றன. இந்து வேதங்களுள் மிகவும் பழைமையாகிய ரிக் வேதம் ‘எல்லா மாந்தரும் இணக்கமாய் வாழ்ந்து வருவார்களாக எல்லோரும் அன்புடன் உரையாடட்டும்; அனைவர் உள்ளங்களிலும் ஒற்றுமை உணர்வு நிலவட்டும். நீங்கள் எல்லோரும், ஒருவர் மற்றவருக்கு உதவிக் கொண்டு வாழ்வீர்களாக’, என்று வழி நடத்துகிறது.

தமிழகம் தந்த ஒரு நெறியாகிய சிவநெறி அன்பினையே எல்லாமாக எடுத்துக்காட்டும் நெறியாகும். தமிழ்மறை தந்த திருமூலர் பரம்பொருளாகிய சிவத்தை அன்பு என்றே குறிப்பிடுகிறார். பரம்பொருளை, “அன்பே அன்பே” யென்று அழுது அரற்றினால், அடையலாம் என்று கூப்பிடுகிறார். அன்போடு உருகி அகம் குழைந்தால் இறைவனை எளிதிற் பெற்று அனுபவிக்கலாம் என்று குறிப்பிடுகின்றார்.

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாய தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.”

“அன்பும் சிவமும்-பொருளும் பொருளின் பயனும் போல” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். மேலும், இறையின்பத்தை ஈரமுடையவர்களே அனுபவிக்க முடியும் என்றும் குறிப்பிடுகிறார். சமய வாழ்க்கை நியதிகள், ஒழுக்கங்களனெத் திருமந்திரம் வகுத்து உரைக்கும் செய்திகளாவன.

“யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.”