பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

63


என்ற திறப்பாடலில் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனே “இசையின் பயன்” என்கிறார். இன்பு அன்பு அடைதலே இசையின் பயன். மாணிக்கவாசகரிடம், அவர்தம் பாட்டுடைப் பொருள் எது? - எனக் கேட்ட பொழுது, அம்பலத்திலாடும் ஆடல் வல்லானை மாணிக்கவாசகர் காட்டியதாக ஒரு வரலாறு உண்டு. ஆதலால் கலையின் பயன் சாதாரணக் களிப்பு மட்டுமன்று; களிப்பினும் உயர்ந்த இன்பமாகும்; திருவருளின்பத்தில் திளைத்தலாகும்; திருவருளின்பத்தில் ஒன்றுவதாகும்.

நமது புலன்கள் அடங்காத் தன்மையன. பொறிகள் மதம்பிடித்த களிறுகள் போல்வன. இவற்றை அடக்கி நெறிப்படுத்தும் ஆற்றல் திருமுறைப் பண்ணிசைக்கு உண்டு. அலையும் ஆன்மாவை, பெருமான் திருவடிப் போதில் கட்டிப்போடும் ஆற்றல் திருமுறை இசைக்கு உண்டு. இறைவனே ஆரூரரின் இசைத் தமிழில் ஒன்றிப்போய் அவன் தன் கடமையைக் கூட மறந்துவிட்டானே!

“...வன்தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி
உரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத்தாழ்த்தோம்
என்றார் அவரை நினைப்பிப்பார்”

என்று சேக்கிழார் பெருமான் இச்செய்தியை எடுத்துரைப் பார். ஆதலால், இசையின் பயன் கட்டறுத்தல்; அன்பில் தோய்தல்; திருவருள் நலத்தினைப் பெறுதல். ஓர் ஆன்மா திருக்கோயிலைத் தழுவியுள்ள கலையால், எப்படி வளர்கிறது, பயன் பெறுகிறது என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு.

கூத்தில் பிறந்து, இசையில் வளர்ந்து நிறைவு பெற்று விளங்குவது இயற்றமிழ். இயற்கை எப்பொழுதும் இன்பமாக இருப்பது. பதிகங்கள், இசைப்பாக்கள், பரிபாடல் முதலியன