பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறிவுக்கு-நற்சிந்தனைக்கு நாம் பெரியாரைத் துணைக் கொள்ளவேண்டும். ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என வள்ளுவரே ஓர் அதிகாரம் வகுத்திருக்கிறார். நல்லவர்களாகிய பெரியவர்களின் துணை நாம் சிந்தித்து வாழவும், சிரித்து மகிழவும் அடிகோலும். அவர்களின் துணையற்ற நிலை தீமையை உண்டாக்கும்; “பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்” என்கிறது தமிழ்மறை. உங்களுக்கு முன்னேற ஆசை இருக்கிறது. ஒரு முறையான-நெறியான ஒழுங்கில்லை. உங்களிடையே நீங்கள் நல்லவர்களெனக் கருதிப் பின்பற்றும் பெரியார்கள் நன்முறையைக் காட்டினால் அவ்வழிச் சென்று அவனியில் உயர முயலவேண்டும். பெரியவர்கள் வழியை முறையைக் காட்ட முடியுமே தவிர வேறெதுவும் செய்ய முடியாது. குதிரையை நீர்குடிப்பதற்காகக் குளத்துக்குக் கொண்டு செல்லலாம்; நீர் குடிக்கவேண்டியது குதிரையே தான். கொண்டு செல்பவரல்ல.

தொழிலாளர் என்ற முறையிலே ஒற்றுமையாக-ஒரு குலமாக இருத்தல் வேண்டும். தொழில் இனங்களிடையே பிரிவும்-பிளவும் இருந்தால் காலப்போக்கில் கசப்பு முற்றிக் கைகலப்பிலும்-பெருங்கலவரத்திலும் முடியும். உழைப்பவர்கள் அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருந்தால் இன்னல்கள் இடுக்கண்கள் ஏற்படும்பொழுது ஓடிச்சென்று உதவ முடியும்-உதவிகளைப் பெறமுடியும். தொழிலாளர்களது கட்டுக்கோப்பிலே-திட்டமானதொரு முயற்சியால் பெட்டி பெட்டியாகப் பணம் சேர்க்கலாம். பலருக்கு உதவலாம். கட்டுக்கோப்பு இல்லையேல் நல்லதிட்டமும் இருக்காது. பெட்டியில் பணமும் நிரம்பாது. அவற்றுக்குப் பதிலாக வீட்டில் கடன் இருக்கும்-கவலையிருக்கும்-அழகாக அலங்காரமாக உடையணிந்து உலாவமுடியாது போனால் மழையில் நனைந்து, வெய்யிலில் காய்ந்து என்ன பயன்? நல்ல குறிக்கோளோடு ஒன்றி வாழவேண்டும். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும்