பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

159


அறங்கூறும் அவைகளிலே நடக்கும் வழக்குகளைக் கணக்கிலெடுத்துப் பார்த்தால், கிறித்தவர்களின் வழக்குகளை விட, முஸ்லீம்களின் வழக்குகளைவிட நம்மவர்களின் வழக்குகளே மிகுதியாக இருக்கும் பிச்சைக்காரர்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டால் இந்து மதத்திலேதான் அதிகமாக இருப்பார்கள்; சிறைக் கைதிகளை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்களிலும் இந்துக்கள் தாம் அதிகம் இருப்பார்கள்.

கிறித்தவர்களிலே முழுநேர ஊழியர்கள் இருக்கிறார்கள். ஒரு சர்ச்சுக்கு மூவாயிரம் குடும்பங்கள் என்று கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். அந்த முழுநேரத் தொண்டர்கள் மூவாயிரம் குடும்பங்களுக்கும் தொண்டு செய்கிறார்கள். மூவாயிரம் குடும்பங்களின் நன்மை, தீமைகள் யாவற்றிலும் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். அதுபோல நமது கோயில், களும் சமுதாயத்தின் மையங்களாக விளங்கவேண்டும். நாமும் தொண்டின் வழியான பிரச்சாரம் செய்யவேண்டும். ஒரு கோயிலுக்கு மூவாயிரம் குடும்பங்கள் வீதம் பிரிக்கப்பெற வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு ஒரு ரூபாய் வீதம் கோயிலுக்கு கொடுக்க வேண்டும். அதிலிருந்து அந்த மூவாயிரம் குடும்பத்தினருக்கும் மருத்துவ வசதி, கல்வி வசதி முதலியனவற்றைச் செய்து கொடுக்க வேண்டும்.

எல்லையைப் பகைவர் ஆக்கிரமித்திருப்பதைப்போல, நம்மிற் பலரை அறியாமையும் ஆணவமும் ஆக்கிரமித்திருக்கின்றன. தலைமையில் நம்பிக்கையும் தளராத முயற்சியும் நம்மை அந்நியரிடமிருந்து காப்பாற்றும்; அன்பு பண்பாடு, அனுபவம் முதலியன நம்மை ஆணவம், அறியாமை என்பவற்றின் பிடியிலிருந்து காப்பாற்றும். சமுதாயத்தின் முழு மட்டமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று ஆண்டாள் நாச்சியார் விரும்பினார். வீட்டிலும் நாட்டிலும் சமய வாழ்வை - சமயப் பண்பைக் காப்பாற்றுங்கள் என்று பெண்களுக்குக் கூற அவர் திருப்பாவை பாடினார்.