பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


17. அன்புச் சமயம்

(மலேசியா நாட்டில் முத்துமாரியம்மன் கோயிலில் 7-7-1982 அன்று ஆற்றிய உரை)

போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குமுரிய தலைவர் அவர்களே! பெரியோர்களே! நண்பர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! குழந்தைகளே! அனைவரையும் நான் காணவும், கண்டு கலந்து பேசி மகிழவும் வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது நன்றி; பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்!

சாதாரணமாக உலகத்தில் ஒவ்வொரு உயிரும் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சிப்பதுதான் அதனுடைய கடமை. ஒரு நல்ல பேருந்து ஒடுகிறது என்று சொன்னால், ஒரு நாய் கூடத் தன்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரைந்து சாலையை விட்டு விலகிவிடும். அதுபோல ஒவ்வொருவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ளுவார்கள். தங்களுடைய தவறுகளைச் சரியானவையென்று கூறுவதும், உங்களை விட என்னுடைய தவறுகள் மோசமானவையல்ல என்பதெல்லாம் ஒவ்வொரு உயிருக்குமுள்ள தற்காப்பு உணர்ச்சியைக் காட்டும்.

போர் வீரர்கள் தற்காப்பு உணர்வை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தமிழ் நாட்டில் திரைப்படம் பார்க்கிற பைத்தியம் கூட இருப்பதால், அதைப் பார்க்கிற பொழுது, அது ஒன்றும் தவறில்லை என்று மிக அருமையாகச் சொல்லுகிறார்கள். பொதுவாகவே நான் சொல்வதுண்டு. "உலக நாடுகளில் எங்காவது தோல்வி, தவறு, குற்றம் இருந்து இதற்கு ஏதாவது சமாதானம் சொல்ல வேண்டுமானால் நல்ல தமிழர்களாகப் பார்த்து அனுப்பினால் நல்ல சமாதானம் சொல்லுவார்கள்" அது நம்முடைய பழக்கம்.