கல்வியியல் கட்டுரைகள்
41
வாழ்க்கையின் சாதனம்
மானுட வாழ்க்கை உயர்ந்தது. அதுவும் ஒரே ஒரு தடவைதான் வழங்கப்படுகிறது. ஆதலால், இந்தப் பிறப்பிலேயே மானுடத்தின் பயனை அடைதல் வேண்டும். "கல்வியைக் கற்பதிலும், ஞானத்தைத் தேடுவதிலும் நம்முடைய ஒவ்வொரு நாளையும் வாழ்க்கையின் கடைசி நாளாகக் கருதிக் கற்பதற்கும், ஞானம் பெறுதற்கும் உரிய முயற்சிகளில் ஈடுபடவேண்டும்” என்பது ஒரு பழைய அறிவுரை. மானுடம் - மனிதம் அறிவாலேயே மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுகின்றது. மற்ற உயிர்க்குலங்கள், இயக்க இயங்குவன. மனிதன் இயக்குகிறவன் இயங்குகிறவன். புவியை நடத்தும் பொறுப்பு மனிதனிடமே இருக்கிறது. புவியை நடத்தும் பொறுப்பை, மனிதன் சிறப்புறச் செய்வதற்குக் கல்வி தேவை அறிவு தேவை அறிவறிந்த ஆள்வினை தேவை. இங்கனம் மானுட வாழ்க்கை சிறப்புற அமையவும், புவிக்கோளம் இன்புற இயங்கவும், பயன்படும் சாதனமாக அமையும் கல்வி, சிறப்பானதாக, உந்து சக்தி உடையதாக அமைய வேண்டாமா? கல்வி, ஆன்மாவை எழுப்பி ஆவேசித்து இயங்கச் செய்ய வேண்டாமா? புவியை நடத்தும் ஆற்றலை மனிதன் பெற எத்தகைய கல்வி தேவை? அறிவு, வளரும் தன்மையது. "அறிதோறறியாமை” என்று திருக்குறள் கூறும். ஆதலால், கற்கும் கல்வியும் பெறும் அறிவும் வளர்ச்சிக் குரியன என்பதை மறந்துவிடக்கூடாது. நாள்தோறும், நாழிகை தோறும் மனிதன் புத்துணர்வு பெற்று வளரவேண்டும், மனிதன் வாழவேண்டும், பிழைப்பு நடத்தக்கூடாது.
மனிதனை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என்பதை மறந்து விடக் கூடாது! உடல், உள்ளம், ஆன்மா இவை மூன்றும் பொருத்தப்பாட்டுடன் ஒத்திசைத்தும் வளர வேண்டும். உடலுக்கும் உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் மாறுபாடுகள் ஏற்பட்டால், மோதல்கள் ஏற்பட்டால் அனைத்து நலன்களும் கெடும்; வாழ்வு பாழாகும், வையகமும் துயருறும்.
கு.xv.4.