பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

269



என்று பாராமல், முயற்சிக்க வேண்டும். மாணிக்கவாசகர் கங்குல் பகற்பொழுது எல்லாம் கரைந்து அழுது திருவருளைப் பெற முயற்சித்தார். திருவருள் பெறும் முயற்சியில் உலகும், உலகியலும் தீராத் தொல்லைகள் தரும். அத்துன்பங்களையும் இன்பமாகக் கருதி ஏற்றுக் கொள்ளாவிடில் திருவருட்பேறு சித்திப்பதில்லை. மேலும், எப்படி கொக்கையே சுடும் மனிதன், நடமாடுகிறானோ அப்படியே நம்மையே தன்னுணர்வளித்து நெறியல்லா நெறிதன்னில் பயின்று மூர்க்கராகி முதலிழந்து அழியச் செய்யும் பொறிகளும் புலன்களும் பகை காட்டுகின்றன. மாணிக்கவாசகர் தாம் இப்படி அலைக்கப்பட்டதாகத் தம் மீது ஏற்றிக் கூறுகின்றார். ஒன்றைப் பெறாமையினால், துன்பம் உண்டாக வேண்டும். அத்துன்பத்தினால் நாம் வாடுதலும் வேண்டும். அப்பொழுதுதான் பெறாமைக்குரிய காரணங்களை நீக்கி, பெறுதற்குரிய முயற்சிகளைக் கவலையுடனும் அக்கரையுடனும் மேற்கொள்ள முடியும். ஆதலால், இறைவனுடைய திருவருளைப் பெறாது அல்லற் படுபவர்கள் அதற்காகத் துக்கப்பட வேண்டும்; வாடுதல் வேண்டும். மாணிக்கவாசகர் இப்படித் துக்கித்தார்வாடினார் என்பதை அவருடைய நூலாகிய திருவாசகமே நமக்குணர்த்தும். இரைதேர் கொக்கொத்து இரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன் என்பது மாணிக்கவாசகரின் மணிமொழி. முழுப்பாடலையும் அனுபவிப்போம்:

அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலில் நெய்போலப்
பேசா திருந்தால் ஏசாரோ?