பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

279



நாங்கூழ் புழுவோடு உயிரை உவமிக்கின்றார், நாங்கூழ் பூச்சியைப் போல அன்பினால் தகுதிப்பாடடையாத உயிர்கள் எலும்பில்லாப் புழுக்களைப் போன்றனவேயாம் மனித உயிர்கள், பயனுடையன; மனித உயிர்களின் அறிவும் ஆற்றலும் உலகத்திற்கும் பயனுடையன. இறைமைத் தன்மைக்கும் பயனுடையன. கழனிகளுக்குப் பயன்தரக்கூடிய நாங்கூழ் எறும்புகளிடையே அகப்பட்டுக் கொண்டது; எறும்புகள் நாங்கூழ் புழுவை அரித்துத் தின்னுகின்றன. இக்கருத்தினை உயிரியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் காட்டுகின்றது. அன்பு என்ற எலும்புரம் பெறாத உயிர் தன்னல வேட்கையின் நிலைக்களனாக இருக்கும். எலும்பில்லாத உடம்பையுடைய நாங்கூழ் புழுவை எறும்புகள் சுலபமாக அரித்துத் தின்பது போல, அன்பில்லாத உயிர்களைப் புலன்கள் அரித்துத் தொல்லைப்படுத்தும். நாங்கூழ் புழுவை எறும்பு அரித்தல் மூலம் அதன் வடிவைச் சிதைக்கிறது-பயன்படு தன்மையை அழிக்கிறது. அது போல, புலன்களால் அரிக்கப்பெறும் உயிர்கள் உயிர்களின் இயற்கைத் தன்மைத்தாய வளர்தல், பயன் பெறுதல், நிறைவு பெறுதல் ஆகிய தன்மைகளினின்றும் அழிகின்றன.

எறும்பிடை நாங்கூழ் பட்டு அரிக்கப்படுதலினும் உயிர் புலன்களால் அரிக்கப்பெறுதல் வேதனைக்குரியது என்று மாணிக்கவாசகர் கண்டார். எறும்பு இடை நாங்கூழ் என்று குறிப்பிட்டதால், நாங்கூழ் எறும்புகளால் சூழப்பெற்று விட்டன-நாங்கூழால் தப்ப முடியவில்லை என்று பொருள் பெறப்படுகிறது. உயிர்கள் புலன்களால் சூழப்படுவதில்லை. சூழ முடியாது; புலன்களினும் ஆற்றல்மிக்க-புழுவுக்கில்லாத அறிவு மனித உயிர்களுக்கு இருக்கிறது. இருந்தும், பயன் படுத்தாமையால் எலும் பற்ற புழு எறும்புகளிடையே சிக்கியது போல, உயிர் புலன்களிடையே சிக்கிக் கொள்ளுகிறது என்ற குறிப்பை உணர்த்துகின்றார்.

நிலத்தை உழுது பயன்காணும் உழவன் நாங்க.ழ் புழு தன் நிலத்தில் நெளிவதை விரும்புவான். அதற்குப் பகை