பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

285


இன்மையின் காரணத்தால் உணர்வால் இளைத்து ஒழுக்கத்தால் இளைத்துக் கயமை நிலையடைவர்.

வங்கு பிடித்த ஊர் நாய் அரிப்பு மிகுதியால் தன்னைத் தானே கடித்துக் கொள்ளும். அதுபோல, திருவருட் சிந்தனை யற்ற மனிதன் பேராசைகளால் அரிக்கப் பெற்று அவ்வழிப் பட்ட குற்றங்கள் பல செய்து அதற்குரிய துன்பங்களைத் தானே பெற்று அநுபவிப்பான்.

நாய் இழிவான பிறப்பு எனினும் நன்றி காட்டும் பண்பு அதனிடத்தில் சிறப்பாக உண்டு. நன்றி காட்டும் இந்தச் சிறப்பில்பும்கூட ஒரு தலைவனிடத்தில் வளர்ந்தாலன்றோ விளங்க முடியும்? ஊர் நாயாக இருப்பதால் நன்றி காட்ட வேண்டிய அவசியமில்லாமற் போகிறது. மனிதனும், அந்த ஊர் நாய் போல் வாழ முடிவதில்லை. எந்த மட்டத்திலும் எந்தக் கட்டத்திலும் அவன் பலரின் உதவிகளைப் பெற்றே வாழுகிறான் - வாழவேண்டியவன். அதனால் அவன் நன்றி காட்ட வேண்டியவனாக இருக்கிறான். ஆனால் அவன் நன்றி காட்டுவதில்லை. காரணம், அவன் ஊர் நாயினும் தரங் கெட்டவனாகத் தரணியில் உலவிக் கொண்டிருக்கிறான்.

ஊர் நாய் ஊரைச் சுற்றிக் கொண்டேயிருக்கும். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டே இருக்கும். பயன் என்ன? நாலு எச்சில் இலையை நக்கிப் பார்க்கும். தன் இனத்தைச் சார்ந்த வேறு நாய்களோடு தேவையின்றிக் குரைத்துக் கடித்தும் கடிப்பட்டுவரும். அதுபோலவே, சிவச் சிந்தனை இல்லாத மனிதர்கள் ஒன்றிய சிந்தனையில் திளைக்காமல்-உறுதியான தொண்டுகளில் ஈடுபடாமல் ஊரைச் சுற்றுவர்-உடம்பாலும் சுற்றுவர். உள்ளத்தாலும் சுற்றுவர். பயன் என்ன? வம்பளத்தல், திமொழி பேசல்-கலகம் விளைவித்தல்-கேவலமான முறையில் வயிற்றைக் கழுவிக் கொள்ள நான்கு காசு கிடைக்காதா என்று ஏங்கி நிற்றல் ஆகியனவேயாகும்.