பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பில்லாதவர்கள் பல ஆயிரம் பேர்கள் உண்டு. அவர்களையும் கடந்துதான் புதுமை வளர்ந்து வருகிறது; இனியும் வளரும். ஆனாலும் நாட்டில் வளர்ச்சியும் மாற்றங்களும் குறைவு.

நாம் நாளை வாழ்வோம் என்ற நம்பிக்கைகூடப் பெறாதவர்களால் நிலையாமைத் தத்துவம் பிழைபட உணர்த்தப்பட்டுள்ளது. உலகத்துக்கும் உனக்கும் உள்ள உறவு நிலையில்லாதது. ஆயினும், உலகமும் உன்னுடைய வழி வழி தலைமுறைகளும் வாழப்போவது உறுதி.

ஆதலால், நமக்கும் சரி, அடுத்த தலைமுறையினருக்கும் சரி, எதிர்கால நம்பிக்கை வேண்டும். வளர்ச்சியுடன் கூடிய மாறுதல் தேவை. சென்ற காலத்தைவிட எதிர்காலம் விழுமிய சிறப்புடையதாக இருக்கவேண்டும் என்பது சேக்கிழார் திருவுள்ளம். "இனி எதிர்காலத்தின் சிறப்பும்" என்பார் சேக்கிழார். பாவேந்தன் பாரதிதாசனும், "புதியதோர் உலகம் செய்வோம்” என்றான்.

ஆதலால், இப்போது நாம் சென்று கொண்டிருக்கிற - நிறைவான வளர்ச்சியும் மாற்றமும் இல்லாத திசையில் தொடர்ந்து செல்லக்கூடாது. புறத்தோற்றத்தில் மட்டுமே புதுமை காட்டும் போக்கும் அறவே கூடாது. மனிதனே மாற வேண்டும். மனிதகுலம் மாறவேண்டும். அன்றாடம், வளர்ச்சியும் மாற்றமும் பொருந்திய திசையில் செல்ல வேண்டும்.

வளர்ச்சி-மாற்றம் என்றால் என்ன? மனிதனின் அறிவு வளரவேண்டும். வளர்ந்து வரும் உலகியலில், மானுடவியலில் எத்தனை எத்தனையோ அறைகூவல்கள் தோன்றுகின்றன. அவற்றைத் தாக்குப்பிடித்து நின்று போராடி முன்னேற வேண்டும்.

அறிவின் வளர்ச்சிக்குப் புத்தம் புதிய நூல்களைக் கற்கவேண்டும். இலக்கியங்கள், புராணங்கள் மிகப் பழமை யானவைகளைக் கற்கவேண்டும். அப்படிக் கற்பது