பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



எது காரணமாக இருப்பினும், பொருளாதார வளர்ச்சி, மனித மனங்களிலேயே தொடங்கப் பெறுதல் வேண்டும். நமது நாட்டில் சுகபோக வாழ்க்கையை எதிர்த்துப் போராடிய சந்நியாசிகள் அறிவுறுத்திய "ஆசை அறுமின்" என்ற கோஷத்திலிருந்து, வறுமையில் கிடந்துழலும்போது நம்மால் எழுந்திருக்க முடியவில்லை.

வாய்ப்பாட்டு, சுருதிக்கு இசைந்தவாறு இருக்க வேண்டும். அதுபோல, ஆசைகளும், சமுதாய நலன், பொது நலன் ஆகியவற்றுக்கு அடங்கியதாக இருக்க வேண்டும்.

நமது பொருளாதார ஆக்கத்திற்குரிய வழி, ஒவ்வொரு பொருளையும் எவ்விதத்தில் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி எவ்வளவு கூடுதல் உற்பத்தி செய்யலாம் என்ற அணுகு முறையிலேயே இருக்கிறது. பொருளாதார வளர்ச் சிக்கு மாமேதை லெனின் 10 கடமைகளை வரையறுத்து வலியுறுத்துகின்றார். அவற்றுள் சில:

1) உங்களுடைய சோம்பேறித்தனம், கவனமின்மை பின்தங்கிய தன்மையை உள்ளவாறு உணருங்கள். இவற்றை மூடி மறைத்துப் பயன் இல்லை.

2) கல்வி இன்மையை மாற்றுங்கள்.

3) சோர்ந்து இருப்பதை எதிர்த்துப் போராடுங்கள்.

4) உங்கள் வேலைகள் எல்லாவற்றையும் சரி பாருங்கள். சொற்கள் சொற்களாகவே இருந்து விடக் கூடாது.

5), பொருளாதார அமைப்பில் நடைமுறையில் வெற்றி அடைந்து இருக்கவேண்டும்.

என்பனவாகும். ஆம்! நமது நாட்டில் சோஷலிச பாணி, ஜனநாயக சோஷலிசம் என்று சொன்னவைகள் எல்லாம் வெற்றி பெறவில்லை. தீர்மானங்களாகவே இருந்துவிட்டன. நடைமுறைக்கு வரவில்லை.