பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

397



இன்று நமது நாட்டின் முதல் பிரச்சனை வேலையின்மையே. வேலையைத் தேடி அலையும் இளைஞர்கள் பல இலட்சங்கள் கைம்மாறி ஒரு சிறு பணி வாங்குவதற்குப் பதிலாக கூட்டு முயற்சியில் சிறுதொழில்களைத் தொடங்கினால் அவர்களுக்கும் வேலை கிடைக்கும்; வேறு சிலருக்கும் வேலை வாய்ப்பளிக்கலாம். சிறுதொழில் கூட்டுறவுகளுக்கு மைய மாநில அரசுகள் நிறைய ஊக்கமளிக்கின்றன.

பிரதமர் நேரு யோஜனா சுய வேலைவாய்ப்புத் திட்டத்தில் நபருக்கு ஒரு இலட்ச ரூபாய் 40 விழுக்காடு மானியத்துடன் தருகிறார்கள். இந்தத் திட்டத்தில் பத்து இளைஞர்கள் ஒருங்கிணைந்து உதவியைப் பெற்றுச் சிறுதொழில் தொடங்கலாம்.

மேலும் முதலீட்டுக்கு - கூட்டுறவு அமைப்பினுடைய பங்கு மூலதனத்துக்கு, 10 பங்கு வங்கிகள் தரும். சிறப்பாகத் தொழிற் கூட்டுறவு வங்கி தரும். ஆதலால், இன்று வாழும் முயற்சியிருப்பின் பணத்திற்குப் பஞ்சமேயில்லை.

இந்தச் சலுகைகளைக் கருவியாகக் கொண்டு கடன் வாங்குவோர் பலர். ஆனால் சிலர்தான் முழுமையாகப் பயன்படுத்துகின்றனர். கூட்டுறவைக் கடன் வாங்குவதற்குரிய சாதனமாகக் கருதாமல், பொருளாதார முன்னேற்றத்திற்குரிய சாதனமாகப் பயன்படுத்தினால் நிச்சயமாக வாழ்க்கையில் வளம் பெருகும்.

ஆர்வம் நிறைந்த அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய கூட்டுறவு முயற்சிகள் தோன்றின், பொருளாதாரம் வளரும். குறைந்த முதலீட்டில் வியக்கத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைக் காண முடியும். அதுமட்டுமல்ல. முதலாளி - தொழிலாளி என்ற சமூக அமைப்பு முறை மறையும். எல்லோரும் ஓர் நிலையே என்ற கொள்கை மேவும்.

மக்கள் புவியை நடத்தவேண்டும் எனில், பொதுவில் நடத்தவேண்டும் எனில், அதற்குரிய ஒரே ஒரு சாதனம்