பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

437



ஆன்மாவினாலேயே சமுதாயத்தைக் காண இயலும்; பேண இயலும், குறைவிலா நிறைவாக, அன்பில் பழுத்து உலகம் தழீஇ வாழ்தலே ஆன்மிகம். இந்த வழியில் இனிமேலாவது நடப்போமாக!

இந்த ஆன்மிக வழியில் நடவாமல் இப்போது அசுர வழியில் போய்க் கொண்டிருக்கிறோம். அதன் விளைவு பாதுகாப்பும், உத்திரவாதமும் இன்மை! வறுமைக்கோடு! துன்பங்கள்! துயரங்கள்! இனிமேலாவது நாளும் நமது ஆன்மாவின் தரத்தை, நலத்தை வளர்த்துக் கொள்வோம்! இம்மாநிலம் பயனுறும் வழியில் வாழ்வோமாக! ஒருவன் உலகத்தையே பெற்றாலும், தனது ஆன்மாவை இழந்து விடுவானாயின் என்ன பயன்?

இன்று ஆன்மாவை இழந்து, பொக்குகளாக, வெற்றர்களாக, வாழ்வோர் பலர். இவர்களை "இந்த வையகம் சுமப்பதுவும் வம்பு" என்றார் ஆண்டாள் நாச்சியார். சமுதாயம் தழீஇய ஆன்மிக வாழ்க்கையே வாழ்க்கை. சமுதாயத்தைப் பற்றியுள்ள துன்பங்கள் அனைத்தும் அகலத் தன்னந்தனியாகவும், கூட்டமாகவும், ஆன்ம வாழ்க்கை வாழ்வோம்! வளர்க ஆன்மிகம்! வளர்க சமுதாயம்!

கடவுளே கூட வான் பழித்து, இம்மண்ணிற்கு வந்தது மனிதனோடு கூடிவாழத்தான்! அதில் ஒரு தனி இன்பம். அந்த இன்பம் நிறைந்த வாழ்க்கைக்குத்தான் ஆன்மிகம் என்று பெயர்.


12. எங்கே போகவேண்டும்?

(29-10-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

மதுரை வானொலி நேயர்களே! இனிய நல் வாழ்த்துக்கள்! கடந்த பதினொரு வாரமாக "எங்கே போகிறோம்?" என்ற தலைப்பில் கருத்துரைத் தொடர் வழங்கும் வாய்ப்புக் கிடைத்தது. நீங்களும் கேட்டீர்கள்.