பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2



வாழ்க்கை விளக்கு

என்ன செய்தோம்?

திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு விழாக் கொண்டாடுவதில் வழக்கம் போலத் தமிழகம் ஈடுபட்டிருக்கிறது. இந்த உலகிலேயே சடங்குகள் செய்து வாளா இருத்தலில் சமர்த்தர்கள் தமிழர்களேயாம். சிலைகள் எழுப்பியும் சின்னங்கள் காட்டியும் வழிபாடுகள் செய்தும் (வழிப்படுதல் அன்று) வாளா உறங்கும் உரிமை தமிழினத்தின் தனி உரிமையோ?

திருவள்ளுவர் பிறந்து ஈராயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த ஈராயிரம் ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்ததென்ன? திருவள்ளுவர் தீதெனக்காட்டி விலக்கிய தீய ஒழுக்கத்திலிருந்து நாம் விடுதலை பெற்றிருக்கிறோமா? நன்று இதுவெனத் தேர்ந்து காட்டிய ஒழுக்க நெறிகளில் நிலை பெற்றிருக்கிறோமா? திருக்குறளை ஈன்றெடுத்த தமிழினம் இன்று எந்தத் துறையில் விழுமிய சிறப்பினைப் பெற்று விளங்குகிறது? ஒரு பயனுமின்றி இரண்டாயிரம் ஆண்டுகளை உருட்டி விட்டோமே என்ற மகிழ்ச்சிக்கு விழாவா?