பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

என்று கூறுகிறது. எனைத்தானும்- எஞ்ஞான்றும்- யார்க்கும்-மனத்தானாம்-அவருடைய சொற்களின் அடுக்கு. அந்தச் சொற்கள் தரும் பொருள்கள் மிகவும் வலிமையுடையன. எந்தவொரு மனிதனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே விரும்புவான். நோயில்லாமல் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறோமா? நோயைத் தடுப்பதற்குக் கம்பளி உறைகளோ, கவசங்களோ முற்றிலும் பயன்படா. பிறருக்கு நோய் செய்யாமல் இருக்க வேண்டும். பிறருக்கு நோய் செய்பவர்கள் இன்றோ நாளையோ நோய்க்கு ஆளாவது இயற்கை நியதியும்கூட பிறர்க்கு நோய் செய்யாதே, நோய்க்கு ஆளாகாதே என்பதனை,

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

என்று கூறி விளக்குகிறது.

வெகுளாமையைத் தொடர்ந்து போற்றி ஒழுக வேண்டிய அறம் கொல்லாமை. வெகுளி காத்தாலே, கொல்லாமை ஒழுக்கம் தானே அமையும். ஒருக்கால் வெகுளி எல்லை கடந்தால், வெகுளியின் வழி கொல்லாமலாவது இரு என்று குறள் கூறுகிறது. "அறவினை யாதெனின் கொல்லாமை" என்று ஐயத்திற்கிடமின்றிக் கூறுகிறது. உயிர்களின் வளர்ச்சிக்கும், உய்தலுக்கும் கருவியாக அமைவது உயிர்க்குப் பருவுடலோடுள்ள தொடர்பேயாகும். இந்தத் தொடர்பை நீக்குதல் உயிர்களின் முன்னேற்றத்துக்கும் உய்தலுக்கும் தடை செய்தலாகும். இஃது அரசியல் வழியிலும் குற்றம்; அருளியல் வழியிலும் குற்றமாகும் என்பதனை உறுதிப்படுத்த, "அறவினை யாதெனிற் கொல்லாமை" என்றும், "ஒன்றாக நல்லது கொல்லாமை” என்றும்,