பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

297


பிறர் கொண்டு துய்ப்பர். உடைமையாம் உரிமையும் இழந்து இரக்கத்திற்குரியவராகின்றனர். இதனை,

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்

என்று குறள் கூறுகிறது. இதில் "கொள்வார் பிறர்" என்ற சொற்றொடர் நிறைந்த பொருளுடையது; நினைந்து நினைந்து உணர்தற்குரியது. "கொள்வார்” என்றதால் கொடுக்காமலே வலியக் கொள்ளுதலும், "பிறர்” என்பதனால் உரிமையும் உறவுமுடையார் அல்லர் என்பதும் உணர்க.

செல்வம் சீருடையது. செல்வத்தினைக் கொடுத்து மகிழ்ந்து வாழ்வோருக்கும் ஒரோவழி வறுமை வருவதுண்டு. ஆயினும், அந்த வறுமையை நன்மனம் உடையவர் விரும்பி ஏற்றுக்கொள்வர். ஏன்? அவர் தம் உளம் நோக்க அது வறுமையுமல்ல. ஒன்றில் பற்றிருந்தாலல்லவோ, பற்றுடைய தொன்று இன்மை, வறுமையாகக் கருதப்பெறும்? செல்வத்தில் உள்ள பற்றைவிட்டுத் தாமே ஈத்து உவந்து மகிழும்; செம்மனச் சான்றோர்களுக்குத் தேவையும் கூடப் பலவாகப் பெருகி நிற்காது. அவர்தம் உயிர் வாழ்க்கைக்குரிய தேவை, பிறர் மகிழ்தலாலேயே அமைந்து விடுவதும் உண்டு.

மேகம் கருவுயிர்த்து முட்டி மோதுகிறது. அது மழையாகப் பொழிந்து தன்னை வறிதாக்கிக் கொள்வதே சிறப்பு. அதுபோலப் பெற்ற செல்வத்தை வழங்கி, மகிழ்வித்து, மகிழ்ந்து எல்லாவற்றையும் இழப்பதையுங்கூடச் சிறப் பென்றே கருதுவர் சான்றோர். மேகம் மழை பொழிந்தவுடன் வறிதே காட்சியளிக்கிறது. மீண்டும் கருத் தாங்கி மழை பொழியும். அதுபோல கொடுத்து மகிழ்வுறும் வாழ்க்கை ஒரோவழி வறுமைப்பாட்டாலும் வறுமை நிலையானதல்ல. அவர்தம் வாழ்க்கையில் மீண்டும் செல்வம் செழிக்கும். இதனை,