பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

29


வீரம் இல்லாதவன் மட்டுமா கோழை? அன்பில்லாத மனிதனும் ஒரு கோழைதான்! வீரமாவது இன்னொரு மனிதனிடத்தில் காட்டப்பெறுவது! ஒரு மனிதன் அன்பினைக் காட்ட, அன்பினில் வளரத் தன் அடங்காப்பிடாரித் தனத்தோடு போராட வேண்டும்; தன்னலத்தை எதிர்த்துப்போராட வேண்டும்; ஆர்ப்பரிக்கும் ஆணவத்தை எதிர்த்து அடக்க வேண்டும்; செருக்களத்தில் போராடும் ஒருவர் இந்தக் களத்தில் தோற்றுவிடுவர். இந்தக் களத்தில் வென்று வாழ்வதே உண்மையான வீரம்! ஈரப்பசை இல்லாத நிலத்தை எளிதில் கண்டுணரலாம். அதுபோலவே அன்பில்லாத மனிதர் வாழும் நிலப் பகுதியையும் எளிதில் கண்டு கொள்ளலாம். ஆங்கு ஏழ்மையிருக்கும்; சண்டை சச்சரவுகள் இருக்கும்.

காவல் நிலையங்கள் ஓயாது தொழிற்படும். ஏன்? சில சமயங்களில் போட்டியில் கடவுளுக்கு விழாக்கூட எடுப்பர். ஆனால், அந்த விழாவில் கடவுள்தான் இருக்கமாட்டார்! அறக்கடவுள் சீரான துலாக்கோல் போன்றவர். இவர் அன்பில்லாதவரைச் சுட்டெரிப்பார் என்று வள்ளுவம் கூறுகிறது.

மனித உலகம் அமைதியாகக் கூடிக் கலந்து சிரித்து மகிழ்ந்துவாழ அன்பே தேவை. அன்புநெறியில் மனித உலகம் வாழும். அதனால் இந்த மண்ணகம் சொர்க்கம் ஆகும். யார்மாட்டும் அன்பு காட்டுவோம்! அன்பு காட்டும் உயர்ந்த சீலத்தில் பகைமையையும் மறப்போம்! வையகம் வாழ அன்பினைப் போற்றி வளர்ப்போம்.


அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.