பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

39



சிந்தனை

சிந்தனை, மனத்தின் தொழில். மனம் ஒன்றைப் பற்றி நின்று அதனையே திரும்ப எண்ணுதல் சிந்தனையாகும். அதனையே என்றால் ஒரே மாதிரியல்ல. ஏன்? எதனால்? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி அந்த வினாக்களுக்கு விடை காண்பதே சிந்தனைப் பயிற்சி. இன்று சிந்தனை என்பது எளிய சொல். சிந்தனை என்ற சொல்லுக்கு உரிய முழுநிறைப் பொருள் பலருக்குப் புரிவதில்லை.

வரலாற்றுச் சுவட்டில் கலந்து வந்துள்ள தீமைகளைத் தொகுத்துக் கூறுவதைக் கூடச் சிலர் சிந்தனை என்கின்றனர். சிந்தனை என்பது குறையும் நிறையும் அறிந்து அளப்பது: குறையை மறப்பது; நிறையைப் போற்றுவது. நிறையைப் போற்றத் தெரியாத இடத்தில் குறை நீங்காது. அதுபோல் குறை மறக்கப் பெறாத இடத்தில் நிறை தோன்றாது. உலகியல் குறையும் நிறையும் கலந்ததே. குறையை நிறைவாக்குவதே சிந்தனை.

சிந்தனை என்பது வைரத்துக்குள் ஒளிந்து கிடக்கும் ஒளியைக் கடைந்து வெளிக்கொணர்வதைப் போல உயிரிடத்தில் ஒளிந்து கிடக்கும் அறிவாற்றல் திறனை வெளிப்படுத்துவது. இதற்குச் சுயசிந்தனை என்று பெயர். முன்னேயே தோன்றியுள்ள ஒரு கருத்தைத் தொடர்ந்து சிந்தனை தோன்றி அக்கருத்திற்குரிய முழுநிறைப் பொருளை வெளிப்படுத்துவது சுயசிந்தனை.

சிந்தனை வளர்ச்சியின்பாற்பட்டதாக, நிறையினைச் சார்ந்ததாக வளரும்பொழுது, மனித உலகத்திற்குப் புதிய செய்திகள் கிடைக்கின்றன. மனித சமுதாயம் அறிவில், கருத்தில், உணர்வில் முதுமையடைந்து எய்த்துப் போகாமல் ஒயாது உயிர்ப்பளித்துக் கொண்டிருப்பது சிந்தனையேயாகும். ஊற்றுவளம் நின்றாலும் ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்