பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இந்த உலகில் அனைவருமே தங்கள்மீது அதிக ஆசை காட்டுகிறவர்கள். அவரவர்களும் அவரவர்களுடைய வாழ்க்கை மீது தனிக் கவனம் செலுத்துவது இயற்கை! பெருவழக்கும்கூட! உங்கள்மீது உங்களுக்குப் பெருவிருப்பம் உண்டா? தற்காப்புணர்வு இருக்கிறதா? அப்படியானால் கோபப்படாதீர்கள்!

ஆம்! நீண்டநாள்கள் வாழவேண்டுமா? அறிவில் சிறந்து விளங்க வேண்டுமா? ஆம் எனில் கோபப்படாதீர்கள்! கோபம் மரணத்தின் வாயில்! அதனால் இதயத்துடிப்பு கூடும்! குருதி கொதிப்பேறும்; இதயம் பாதிக்கும்! மரணம் வந்து சேரும்!

ஆதலால் மரணத்தைத் தவிர்க்கவும், நீண்டநாள் வாழவும் வேண்டுமானால் கோபப்படாதீர்கள்! கோபம் நிதானத்தை இழக்கச் செய்யும்! அவ்வழி சிந்தனைப் புலன் சிதறும். அறிவு கையிகந்து போகும்! கோபத்தின் விளைவால், மனிதன் மிருகமாகிறான். ஏன் இந்த அவலம்? கோபம் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!

மனித சக்தி அளப்பரிய ஆற்றல் உடையது. படைப்பாற்றல் மிக்கது. இத்தகு அற்புதமான மனித ஆற்றலை ஒன்றுக்கும் பயன்படாத கோபத்தில் பாழாக்கலாமா? அடக்கி வைத்த உஷ்ணம் சக்தியாக மாறுகிறது. அதுபோலக் கோபம் வரும்போது அக்கோபத்தை உள்ளடக்கி ஆற்றலாக்குக! அந்த ஆற்றல் ஆக்கநிலையில் அற்புதங்கள் செய்யும்! யார்மீது உங்களுக்குக் கோபம்? அவர்களையே நட்பாக்கிக் கொள்ளலாம். தீமை நன்மையாக வளரும்!

"எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் அமைதி இழக்காதவர்கள் பொறுமைசாலிகள்" என்றார் லூயிஸ் டீவென்சன்! அவர் மேலும் விளக்குகிறார். கடிகார்ம் எந்தச் சூழ்நிலையிலும் டிக்டிக் என்று ஒரே மாதிரி அடிப்பதைப்