பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



159


'பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்'

என்று நயத்தக்க நாகரிகம் பேசிய வள்ளுவர் பிறந்த நாடு அன்றோ நமது நாடு? குறள்வழி, நஞ்சினையுண்டும் வாழ்ந்தார் நமது ஞானத் தலைவர் அப்பரடிகள்.

மனிதன் ஒரு சொரிசிறங்கு பிடித்தவன்போல; அரிப்பு ஏற்பட்டபோது சொரிந்து கொள்வான்; சொரியும்போது சுகமாக இருக்கும். பின்னர் எரிச்சல் ஏற்படும்; அவ்வாறு எரிவெடுத்ததும் இனிமேல் சொரியக்கூடாது என்று தனக்குள் எண்ணிக்கொள்வான். பின்னர் ஊரல் ஏற்படும்போது அதை மறந்து சொரிய ஆரம்பித்து விடுவான். அதுபோலவே பலர் அன்பு, அருள் என்று படிக்கும்போது அன்பும் அருளும் காக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வார்கள்; அடுத்த நேரமே அவற்றை மறந்துவிடுவார்கள். இத்தகைய பண்பு, வாழும் மனித சமுதாயத்திற்கு நல்லதல்ல. நாம் கற்க வேண்டும்; கற்றநெறியில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் வழுக்கலும், இழுக்கலும் ஏற்படும்போது ஊன்றுகோல் போல நின்று உதவுவது திருக்குறள். வீட்டிலும், நாட்டிலும் குறள் மணம் கமழ வேண்டும்; குறள் வாழ்வு மிளிர வேண்டும்.

3. வாழ்வியற் கவிஞர்

நூறுமைல் தொலைவைக் கடந்து செல்ல, ஒவ்வோரங் குலத்தையும் கடந்து செல்வது போல, மனிதனின் உள்ளுணர்ச்சிகள் வளர வளர அவன் தனது சிறு குறை நிறைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு நிறைவு படுத்திக் கொள்வது சிறந்த வாழ்க்கை முறை. பொதுவாக நமது நாட்டில் பலர் வாழ்க்கையைப் பற்றிய துறைகளில் அக்கறை கொள்வதில்லை-ஆர்வம் காட்டுவதில்லை. வாழ்க்கைக் கலை நுண்ணியது. ஆழமானது. வாழ்க்கையைப் பூரணமாகப் பயன்படுத்தி வளர வேண்டும்.