பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருளீட்டுதலைத் திருக்குறள், "சலத்தால் பொருள் செய்தல்" என்று கூறுகிறது. இனிய செல்வ, திருக்குறள் இந்த மட்டோடு நிற்கவில்லை. சலத்தால் பொருள் செய்தல் நில்லாது என்பதற்கு, "பச்சை மண்ணால் செய்யப்பெற்ற பானையில் தண்ணீர் சேமித்து வைத்து இருப்பதை" உதாரணமாக எடுத்துக் காட்டுகிறது.

இந்தக் கையூட்டு எப்படிக் கால்கொள்கிறது? இனிய செல்வ, மனித உரிமைகள் மதிக்கப் பெறாமல் அவர்களுடைய உரிமைகள் கூட ஆட்சியாளர்களால் மதத் தலைவர்களால் சலுகை எனக் கருதி வழங்கப்பெறும் காலத்தில்தான் கையூட்டுமுறை நுழைகிறது. சலுகையென்றால் வழங்குவோரின் விருப்பு-வெறுப்புக்கள் காரணமாக வழங்கப்பெறாமலும் போகலாம். அல்லது காலம் தாழ்க்கப் பெறலாம். அதனால் வாய்ப்பிழந்தவர்கள், வாழ்விழந்தவர்கள் எப்படியாவது வாழ்ந்திடவேண்டுமே என்று அஞ்சித் தான் கையூட்டுக்கள் வழங்குகின்றனர். அதுவும் மகிழ்ச்சியோடு கொடுப்பதில்லை. அழுதுகொண்டே கொடுக்கின்றனர். "அழக்கொண்ட எல்லாம் அழப்போம்!” "வேலொடு நின்றான் இடு என்றது போலும்” என்ற திருக்குறள்களையும் அறிக.

இந்தச் சூழ்நிலையில் கையூட்டுக்கள், ஊழல்கள் அற்ற சமுதாய அமைப்பு காணவேண்டுமாயின் அடியிற்கண்டுள்ள நடைமுறைகள் தேவை.

1.நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்களுடைய அடிப்படை உரிமைகள் உத்தரவாதம் செய்யப் பெற வேண்டும். (கல்வி, வேலை வாய்ப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், மருத்துவம் முதலியன).

2.நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் யாதொரு தடையுமின்றி உரிய காலத்தில் கிடைக்கத்தக்க வகையில் அரசு இயந்திரம் இயங்க வேண்டும்.