பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



397


என்றது. ஒரு மனிதர் தாம் எண்ணியவாறே எண்ணியவற்றை அப்படியே அடைவர் என்பது திருக்குறள் கருத்து. ஆம்! உண்மை!

இன்று பலருக்கு என்ன செய்யவேண்டும் என்று எண்ணும் பழக்கமே இல்லை! கேட்டதைச் செய்கிறார்கள்! சொல்வதைச் செய்கிறார்கள்! கைக்கு வந்ததைச் செய்கிறார்கள். ஆழ்ந்த எண்ணத்திலிருந்து செயல்கள் முகிழ்க்காத தன் காரணமாக, செயல்கள் செய்வதில் துணிவான, ஆர்வம் செறிந்த இலக்கு உணர்வுடன் கூடிய துடிப்பு இருப்பதில்லை. அதன் காரணமாகப் பயனும் விளைவதில்லை. இலக்குடன் கூடிய வாழ்க்கைக்கு எண்ணங்களே வித்துக்கள்! எண்ணங்கள்தான் முளைத்துச் செடியாகி மரமாகிப் பயன் தருகின்றன. எண்ணம் போல வாழ்வு என்ற பழமொழியை உணர்க!

எண்ணினால் மட்டும் போதாது. எண்ணத்தை அடையும் செயற்களத்தில் போர்க்குணத்துடன் போராட வேண்டும். தடைகளுக்கும் துன்பங்களுக்கும் அஞ்சி தயங்கிப் பின்னடைவாக நின்று விடக்கூடாது. எண்ணத்தில் திண்மை வேண்டும். இனிய செல்வ, கொட்டகை போடும் தொழிலாளர் கொட்டகை போடுதற்குக் குழிதோண்டிக் காலூன்றுவார். காலை ஊன்றி மண்இட்டு மூடியபிறகு தூணாக நிற்கும் கம்பை ஆட்டி அசைத்துப் பார்ப்பார். ஆட்டம் இல்லையானால் கொட்டகைக் காலின் உறுதிப்பாட்டை அறிந்து கொண்டு கொட்டகை போடுவார். அதுபோல வாழக்கை பற்றிய - வாழ்க்கையின் இலக்கு பற்றிய எண்ணம் வேண்டும். உறுதியாக எண்ண வேண்டும். அப்போது எண்ணியதை அடையலாம்.

இனிய செல்வ, "காவிரி போற்றுதும்! காவிரி போற்றுதும்" என்று போற்றிப் புகழப்பட்ட காவிரியின் நீர்ப்பிரச்சினை பற்றி 100 ஆண்டுகளாக விவாதம் நடந்து கொண்டே வருகிறது; காரியம் ஒன்றும் ஆகவில்லை. இன்று