அடிகளார் மடல்
509
திருவள்ளுவர், நாடாளும் மன்னன் தன்னை வியந்து கொள்ளக்கூடாது, "பணியுமாம் என்றும் பெருமை” என்பது போல இருக்கவேண்டும் என்றார். விண்ணளந்து காட்டி வானை மறைக்கும் கோயில்களின் அடிக்கற்கள் மறைந்து கிடக்கின்றன. வண்ண வண்ண மலர்களையும் இனிய சுவையுடைய கனிகளையும் தரும் மரங்களின் வேர்கள் மண்ணிற்குள் மறைந்து கிடக்கின்றன. ஏ! மனிதனே! நீ என்ன செய்துவிட்டாய்! ஏன் புகழ்வேட்டை ஆடுகிறாய்! உடன் நிற்கும் கூலிப் பட்டாளம் புகழ்வதும் புகழாமா? என்று உளதாகும் சாக்காடு கிடைக்கிறதோ அதுதான் புகழ். தன்னை வியத்தலும், பிறர் வியக்குமாறு செய்து கொள்ளுதலும் நன்றல்ல; புகழல்ல; வாழ்வு நெறியுமல்ல. அடக்கம், பணிவு, கைம்மாறு வேண்டா கடப்பாடு-இவையெல்லாம் வாழும் மானிடத்திற்கு அழகு! அதனால் தான் திருவள்ளுவர்,
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
(439)
என்றார். இனிய செல்வ, அடுத்து எழுதுகின்றோம்.
இன்ப அன்பு
அடிகளார்
இனிய செல்வ, அண்மைக் காலமாக, திருக்குறள் பெண்ணியத்தைக் கீழ்மைப் படுத்தும் நூல் என்ற கருத்து, விவாதமேடை ஏறி இருக்கிறது. இனிய செல்வ, சமூகப் பழக்க வழக்கங்கள் காலத்திற்குக் காலம் மாறும் இயல்பின. ஒரு காலத்தில் தோன்றும் நூல்கள் அந்தக் காலச் சமூகப் பழக்கவழக்கங்களைக் களமாகக் கொண்டும், சில பழக்கங்கள்-வழக்கங்கள் மாற உந்து சக்தியாகவும் அமைவதுண்டு. அத்தகைய நூல்களில் திருக்குறள் ஒன்று.