பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

510

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இனிய செல்வ, திருக்குறள் முற்றாக மரபு வழி வந்த நூலும் அல்ல; முற்றிலும் புதுமை செய்த நூலும் அல்ல. திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மக்களின் சிந்தனை - செயல்திறன் நோக்கி நூலை இயற்றியுள்ளார். அவர் இயற்றிய நூலில் சிலதான் அவருடைய சொந்தக் கருத்து. பல அவர் காலத்தில் நாடு இருந்த நிலையை விளக்கியிருக்கிறார் என்று கொள்ளுதல் வேண்டும். இனிய செல்வ, திருக்குறள் அறத்துப்பால் தனி மனித ஒழுகலாறுகளையும் குடும்பப் பாங்கினையும் விளக்கிக் கூறுகிறது.

‘பெண் வழிச் சேறல்’, ‘வரைவின் மகளிர்’ அரசியலில் கூறப்படுகின்றன. இந்த அதிகாரங்களின் முறை வைப்பைப் பார்த்தால்தான் திருக்குறள் பெண்ணியத்தைப் பெருமை படுத்துகிறதா அல்லது இழிவு படுத்துகிறதா என்பதை உள்ளவாறு உணரமுடியும். ஆண்-பெண் ஒழுகலாறுகள் சமுதாயத்தில் நிலவும் ஆண்-பெண் விகிதாசாரத்தைப் பொருத்தது. மக்கள் தொகையில் ஆண்-பெண் விகிதாசாரம் சமநிலையில் இருந்தால் நல்லது. ஆனால் பல சமயங்களில் பெண்களின் விகிதம் கூடிவிடுகிறது. ஏன்? பல ஆண்கள் - பெண்ணியல் தன்மை தழுவி வாழும் ஆணகள், ஆண்களாக இன்றி வாழ்கின்றனர். அதுதான் காரணம்.

பாரதத்தில் வரும் ஐவருக்கு ஒருத்தியா என்று கேலி செய்வர். அது அந்தக் காலச் சமுதாய அமைப்பின் கட்டாயம். இனிய செல்வ, அரசியலில் ‘பெண் வழிச் சேறல்’ அதிகாரம் உள்ளது. அரசியல் மிகமிக உயர்ந்தது. அரசியலில் ஆட்சியாளருக்கு ஆலோசனை கூற மிக மிக உயர்ந்த மதிநுட்பமும் தேவை. அதனாலேயே தமிழருடைய அரசியல் முறையில் ஆள்வோருக்கு ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற அமைப்புக்கள் இருந்தன. திருவள்ளுவரும் அமைச்சியல் பற்றி நிறையவே பேசுகிறார்.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு

(631)