பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருந்தன. அவற்றை ஆராய்ந்து அதிலிருந்து இதைச் செய்தார்கள்.

திருவள்ளுவர் ஓர் அரசியலைப்பற்றிப் பேசும் பொழுது இந்த உலக அரசியல் சட்டங்களையெல்லாம் கருதவோ படிக்கவோ எண்ணவோ அவர்க்கு வாய்ப்பில்லை. அவருடைய அரசியல்சட்டம் சுய சிந்தனையிலே இந்நாட்டினுடைய மண்ணுக்கு ஏற்றவாறு-நிலத்திற்கேற்ற வாறு- தகுதிக்கேற்றவாறு- தரப்பாட்டிற்கேற்றவாறு அமைந்த ஒரு சட்டம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

நீதிமன்றங்கள், குற்ற இயல் நீதி வழங்குகின்ற மன்றங்கள், இவற்றைக் கேட்டால்கூட நம்முடைய குறள் நெறி அமைப்பு, சட்டத்திற்கு ஒத்து இருக்கிறது என்று நிர்ணயம் செய்து சொல்லும்.

அவ்வளவு தெளிவாக இந்த அரசியல் சட்டத்தை-வாழ்க்கைச் சட்டத்தை ஆக்கியிருக்கிறார் வள்ளுவர்.

திருவள்ளுவர் தனி மனிதனை நம்பி அவனை அணுகுகிறார். தனி மனிதன்மீது அவருக்கு இருந்த கங்கு கரையற்ற-அளவு கடந்த நம்பிக்கை இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது.

மனிதனை வெறும் சோளக் கொல்லை பொம்மை போல் அவர் கருதாமல், அவன் எல்லாச் சக்திகளும் படைத்தவன். அவன் நினைத்தால்-விரும்பினால், எண்ணிய எண்ணியாங்கு எய்த முடியும் என்று மிக நன்றாக நம்பி அவனை அணுகுகிறார். அவனைக் குடும்பத்தோடு கொண்டு போய்ச் சேர்க்கிறார்; அதற்குப் பிறகு சமுதாயத்திற்கு அழைத்துச் செல்லுகிறார். இந்த அமைப்பிற்கு வந்த பிறகு, அவன் எங்கேயாவது வழுக்கி விழுந்துவிட்டால் அவனுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அரசு என்ற ஒன்றையும் அமைக்கிறார். அவன் காவலுக்கும், நலனுக்கும் அரசே தவிர, அவனைக் கட்டி வைப்பதற்கு அரசு அல்ல.