பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
திருக்குறள் காட்டும் நீதி

திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. ஆயினும் உலகில் தோன்றிய அரசியல், சமூக சமய நூல்கள் பலவற்றுள்ளும் சிறந்து விளங்குவது. கிரேக்க நாட்டுச் சிந்தனையாளன் சாக்ரடீஸின் மறு பிறப்போ என்று எண்ணக்கூடிய அளவுக்குச் சாக்ரடீஸின் சிந்தனையுடன் திருவள்ளுவர் சிந்தனை ஒத்துள்ளது.

அதுமட்டுமல்ல. சாக்ரடீஸ் முடியரசை ஆதரித்தார். முடியரசை அரசின் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரசனுக்கு ஆலோசனை கூறினார்.

மக்களைக் கேளிக்கைகளிலும் திருவிழாக்களிலும் ஈடுபடும்படி செய்து அரசைப் பற்றி, அரசியலைப் பற்றி, அரசின் நடைமுறைகளைப் பற்றிச் சிந்திக்கின்ற வாய்ப்பை வழங்காதிருக்கும்படி ஆலோசனை கூறினார்.

ஆனால், திருவள்ளுவர் முடியாட்சியைச் சார்ந்து எழுதினாலும் அரசனின் ஆட்சி மக்களைத் தழுவியதாக அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.’

544

என்பது வள்ளுவம்.