பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

115


மாட்டார்கள்! மக்களாக இருந்தால் அல்லவா திருந்த? தலையெழுத்தில் கால் நீட்டியாகிவிட்டது. கால் அதிகமானால் விலங்குகள் என்றுதானே பொருள்! விலங்குகள் என்ன பாவம் செய்தன, இவர்களோடு ஒப்பிட்டுக் கூற? உவமித்துக் கூற விலங்குகளுக்குத் தோற்றம் போலவே வாழ்க்கை முறை? ஏமாற்றங்கள் இல்லை!

மாக்கள் நிலை அப்படியல்லவே. அவர்கள் துன்பப் படும்பொழுது மட்டுமே மயங்குவர்; அழுவர். இவர்களைத் திருத்த கரும்பைப் பயன்படுத்தும் வழியே பயனுடையதாகுமா? வேறு வழியில்லையா?


“மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்று
அறத்துறை மாக்கள் திறத்தில் சாற்றி
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும்
யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்
தீதுடை வெவ்வினை உருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்”

(சிலம்பு ஊர்காண் 27-32)

என்னும் சிலப்பதிகார அடிகள் எண்ணத் தக்கன.

பெண்டிரும் உண்டு கொல்!

கொலையுண்ட கோவலன் பிணத்தை, கொலையுண்ட இடத்தில் கண்ட கண்ணகி, பாண்டியனின் அவைக்களத்தை நோக்கி, நடக்கிறாள் நீதி கேட்க! ஊர் முழுதும் நீதி கேட்டு நடக்கிறாள்! அப்பொழுது முதன் முதலாக, கண்ணகி, “பெண்டிரும் உண்டு கொல்! பெண்டிரும் உண்டு கொல்!” என்று அறை கூவி அழைத்துக் கேட்கிறாள்!

ஏன்? பெண்டிர் இருந்திருந்தால் கோவலன் கொல்லப்பட்டிருக்கமாட்டானா? ஒரு நாடு, ஒரு நகரம் என்றிருந்தால் பெண்கள் இல்லாமலா இருப்பார்கள்? கணவனை இழந்த துன்பத்தின் அனுபவத்தை உணரும்