பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

217



“தேரா மன்னன்” என்பது வழக்கு! “யானோ அரசன்?” என்பது பாண்டியன் தனக்குத்தானே எழுதிய தீர்ப்பு! “யானோ?” என்ற ஐய வினாவில் அரசனல்லன் என்பது பாண்டியனின் தீர்ப்பு முடிவு! அடுத்து “யானே கள்வன்!” என்றான் “என் கணவன் கள்வனா” என்பது வழக்கு.

கண்ணகி கணவன் கள்வனல்லன் என்று கூறாமல் “யானே கள்வன்” என்று கூறியதன் மூலம் கோவலன் கள்வனல்லன் என்ற தீர்ப்புக் கிடைக்கிறது. கோவலனின் சிலம்பு பாண்டியன் வசம் இருந்தது-ஓரிரவு! அடுத்து கோவலனின் உயிரை முறைகேடாகப் பறித்தது - இரண்டாவது களவு! அதனால் பாண்டியன் ஐயத்திற் கிடமின்றித் தன்னயப்பின்றித் தற்சலுகையின்றி “யானே கள்வன்” என்று தீர்ப்பினை அறிவிக்கின்றான்.

அரசனின் முறைகேடான செயலால் கோவலனின் உயிர் பறிக்கப்பட்டது. உயிர்க்கு உயிர்தான் தண்டனை! பாண்டியன் தீர்ப்புச் சொன்னதோடின்றிக் “கெடுக என் ஆயுள்"- என்று தண்டனையும் விதித்துக் கொள்கிறான்.

பாண்டியனின் உயிர், அரச நீதியில் தங்கி இருந்தமையால் நீதி பிழைத்ததறிந்த நிலையில் உயிர் தானே பிரிந்தது! உலக வரலாற்றிலேயே இத்தகைய அரசியல் இருந்ததில்லை! இருக்கப் போவதும் இல்லை! இது சிலம்பு விளைத்த புதுமை!

பத்தினிப் பெண்டிரைத் தொழும் மரபு சிலம்பு விளைத்த புதுமை. பத்தினிப் பெண் கற்பின் திண்மையால், ஆற்றலால் தன் சிலம்புக்குச் செங்கோலின் அதிகாரத்தையே மாற்ற முடியும் என்ற நம்பிக்கை சிலம்பு விளைவித்த புதுமை. நாடாளும் அரசர்கள் பத்தினித் தெய்வத்தை நீதித் தெய்வமெனப் போற்றினர். இது புதிய மரபு; முற்றாகப் புதுமை.