கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்
273
முதலிடத்திற்கு வந்து அமர்ந்து கொள்கிறது. ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று திருக்குறள் கூறுகிறது. ‘கடவுள் பக்திக்கு அடுத்தபடியாக முக்கியமான கடமையாக இருப்பது, அறவழியில் செல்வம் ஈட்டுதலேயாம்’ என்றார் முகம்மதுநபி.
கோசல நாட்டுப் பொருளாதாரம்
கோசல நாட்டில் பொருள் வளம் நிறைந்து இருந்தது என்பதைக் கம்பன் பல பாடல்களில் விளக்குகின்றான். கடல் கடந்த நாடுகளில் எல்லாம் வர்த்தகம் செய்ததன் மூலம் நிறைய நிதி வந்து குவித்தது. ஒரு நாட்டின் ஏற்றுமதிதான் அந்நாட்டின் செல்வத்தை அளந்தறிதற்குரிய அளவுகோல். விளை நிலங்கள் நன்றாக விளைந்தன. நிலத்தடியிலிருந்து வைரக் கற்கள் அகழ்ந்தெடுக்கப் பெற்றன. இங்ஙனம் பலவகையாலும் செல்வம் செழித்த கோசல நாட்டைக் கம்பன்,
“கலம் சுரக்கும் நிதியம்: கணக்கு இலா
நிலம் சுரக்கும், நிறைவளம் நல்மணி
பிலம் சுரக்கும்”
என்று குறிப்பிடுகின்றான்.
கோசல நாட்டில் வறுமை இல்லை. வறுமை கொடியது. சமய நூலாகிய சித்தியார், ‘வறுமையாம் சிறுமை தப்பி’ என்று கூறும். ‘நெருப்பினுள் தூங்கலாம் ஆனால் வறுமையில் தூங்க முடியாது’ என்று திருக்குறள் கூறும். வறுமை மனிதனுடைய உணர்ச்சியை மரத்துப் போகச் செய்து விடுகிறது. உயரிய பண்புகளை இழக்குமாறு செய்து விடுகிறது. வறுமை மனிதனுடைய ஊக்கத்தையும் பண்பையும் பறித்து விடுகிறது. ஆதலால்,
“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது”