பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

367


ஆட்சியே நடத்துகிறது! இவையெல்லாம் தவிர்ந்த நல்லாட்சி காண,

"கதிர்நாட்டை நரிக்கண்ணன் ஆளும் ஆட்சி
கடுகளவும் தீங்கின்றி இருப்ப தற்கும்
பொதுநாட்டம் உடையதோர் அறிஞன் தன்னைப்
போயிங்கு நீர்அனுப்ப வேண்டும்"

(பாண்டியன் பரிசு-பக்.54)

என்ற வரிகள் துணை செய்யும். ஆம்! நாட்டு மக்களை நடுநிலை, சமநிலைகளில் பார்த்து நடத்திடும் நல்லாட்சி அமைய வேண்டும் என்பது பாரதிதாசன் குறிக்கோள்!

நல்லாட்சியின் இலக்கணத்தைப் பாவேந்தன் விவரித்தும் கவிதை செய்துள்ளான். இன்று "மக்கள் நலம் பேணும் அரசு" (Welfare State) என்பதற்குள்ள இலக்கணம் அனைத்தும் பாரதிதாசனின் நல்லாட்சித் திட்டத்தில் அடங்கியுள்ள அருமைப்பாட்டை எண்ணுக நாடு விடுதலை பெற்று 43 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் பாவேந்தனின் எண்ணங்கள் ஈடேறவில்லை. இன்று நமது நாட்டில் "எல்லார்க்கும் தேசம்", என்பது அரசியல் சட்டத்தில்தான்! ஆனால் தேசம், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள முதலாளிகளிடம் கையடை செய்யப்பெற்றுள்ளது. எல்லார்க்கும் கல்வி கிடைக்கவில்லை. நமது நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் 33% தான். ஆனால் ஊர்தோறும் பள்ளிகள் அமைத்ததில் குறையில்லை. எங்கு குறை, அரசுக்குத் தட்டிக் கேட்கும் துணிவில்லை; ஆரம்பக் கல்வியை நெறிமுறைப் படுத்த விருப்பம் இல்லை! நமது நாட்டில் ஏழைக்கு, "சுகாதாரம்" என்பது அகராதி அளவில் உள்ள ஒரு சொல்லேயாம். பாவேந்தன் கவிதையைப் படியுங்கள்!

"எல்லார்க்கும் தேசம் எல்லார்க்கும் உடைமைஎலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!