பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

379



ஆற்றல் - சக்தி, உழைப்பு, உணரப்படுவனவும், அறியப்படுவனவும்கூட! ஒரு பொருளை அதன் இயல்பான, மதிப்பிலிருந்து கூடுதல் மதிப்புடையதாக மாற்றும் ஆற்றலுள்ள செயற்பாட்டுக்கே உழைப்பு என்று பெயர். இந்த உழைப்பை வழங்கும் உழைப்பாளிகளே உலகத்தின் படைப்பாளிகள். இதனை, பாவேந்தன் பாரதிதாசன்,

சித்திரச் சோலைகளே - உமைநன்கு
திருத்தஇப் பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ! உங்கள் வேரினிலே!

"நித்தம் திருத்திய நேர்மையினால்மிகு
நெல்விளை நன்னில மே! - உனக்கு
எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே!”

"ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே - உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள்
ஊர்த்தொழி லாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய்அல்ல வோ?”

(பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி, பக்.156)

என்று வியந்து பாராட்டி மகிழ்ந்திருக்கின்றான்.

முடிவுரை

பாவேந்தனின் இலட்சியம் உழைப்போரை வாழ்த்துவது; உழைப்போரையே உறுப்பினர்களாகக் கொண்ட ஓருலகம் காண்பது. அந்த உலகத்தில் அனைவரும் உறவினர். அவர்கள் உலகத்தை உண்பித்த பின்னே உண்பர். இந்த உலகம் எப்போது தோன்றும்? தமிழ் இளைஞர்களே! இந்திய இளைஞர்களே! உங்கள் வாழ்க்கை இதற்கு வழி கூறட்டும்!