பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

21


கேளாதே!” என்றருளிச் செய்கின்றார். தேர்வில் மதிப்பெண் வாங்காமையை “முட்டை வாங்கினான்” என்று பரிகாசம் செய்வதுண்டு. அதுபோல் எந்தவிதமான பயனும் இல்லாததுடன் அறியாமையும் கலந்த சொற்களை “முட்டைக் கட்டுரை” என்று குறிப்பிடுகின்றார். முட்டைக் கட்டுரையை, பயனற்ற சொற்களைக் கேட்கவும் கூடாது; சொல்லவும் கூடாது என்பது திருஞானசம்பந்தர் வழங்கும் அறிவுரை.

தமிழர் பண்பாடுகளில் தலையாயது கொடுத்தல். ‘இல்லை’ என்று கூறி இரத்தலுக்கும் முன்பே கொடுத்தல், அறம். இந்த அறப்பண்பைத் திருஞானசம்பந்தர் பல இடங்களில் பாராட்டியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் திருக்கண்டியூருக்கு அருகில் திருவேதிகுடி என்று ஒரு சிற்றூர் உள்ளது. அங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமானை, வேதங்கள் வழிபட்டமையால் அவ்வூர் திருவேதிகுடி என்று பெயர் பெற்றது. இத் திருத்தலம் வளமாக அமைந்திருந்தது என்பதனை “வளமாரும் வயல் வேதிகுடியே!” என்றருளியமையால் அறியலாம். இன்று இந்தத் திருக்கோயில் முறையாகப் பேணப்படவில்லை. இத்திருத்தலத்தில் அன்று வாழ்ந்த மனிதர்கள் மிகவும் கொடைப் பண்பு உடையவர்களாக விளங்கியிருக்கிறார்கள்.

விலை ஏற்றம் என்பது இப்போது மட்டும் உள்ள சிக்கல் அல்ல. திருஞானசம்பந்தர் காலத்திலும் விலை ஏற்றம் இருந்திருக்கிறது. விலை ஏற்றத்தைப் பற்றித் திருவேதி குடியில் அருளிச் செய்த பதிகத்தில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். “வையம் விலை மாறிடினும்” என்பது திருஞானசம்பந்தர் வாக்கு. விலை மாறுதல் என்பது விலை ஏற்றத்தையே குறிக்கிறது. இந்த மண்ணகத்தில் விலை மாறினாலும் கெடாத பண்பாடுடைய திருவேதிகுடி மாந்தர்கள் புலவர்களுக்கு வழங்குவர். அங்ஙனம் வழங்கும்