பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடமையா? கடவுளா?

71


உடுத்திய உடலெனக் கருதிப் போற்றியவர்; இல்லை, உடலுக்குள் விளங்கும் உயிரெனக் கருதிப் போற்றியவர்.

கடமை - இந்த உலகத்தின் இயக்கத்திற்குரிய அச்சாணி. கடமை யென்ற அச்சாணியில்தான் உலகம் சுழல்கிறது; இயங்குகிறது. வாழ்தலுக்கும், சாதலுக்கும் இடையே உள்ள போராட்டம் கடமையை மையமாகக் கொண்டது. சொர்க்கத்தை அடைய வேண்டுமானாலும் அடி அடியாக நகர்ந்து சென்றுதான் அடையவேண்டும். சொர்க்கத்தை அடையும் காலம் வரையில் வாழ்கின்ற வாழ்க்கையென்ற ஒன்று உண்டே! அந்த வாழ்க்கையை மனிதன் கடன் படாமல் நிகழ்த்த வேண்டும். களவு செய்யாமல் நடத்தவேண்டும். வாழ்க்கையைக் கடன் படாமலும் களவு செய்யாமலும் நடத்தக் கடமை செய்தலைத்தவிர வேறு வழியேது? உழைக்காமல் உண்டால் உழைத்து உணவைக் கொடுத்தவனுக்குக் கடன் படாமல் வேறு என்ன? உழைப்பை உழைப்பால் ஈடு செய்யாமல் எடுத்துக்கொண்டால் அது களவு. எடுத்துக்கொண்ட அளவுக்குத் திரும்பக் கொடுத்ததாக இல்லை. இந்தக் கடன்காரனைக் கடவுள் உலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும். ஆதலால் சொர்க்கத்தின் வாயிலைத் திறக்கும் சாவி கடமையேயாகும்.

கடவுள், யாரை விரும்புகிறார்? பசி தீர உண்டு உறங்குபவனையா? ஒருபொழுதும் இல்லை. கடமையைச் செய்யாதவன் கடவுளுக்குப் பக்தனாக முடியாது. சைத்தானுக்கு வேண்டுமானால் தோழனாகலாம். கடவுளே கடமையின் திருவுரு; உலகத்தின் மிகப்பெரிய தொழிலாளி; ஓய்வு உறக்கமின்றித் தொழிற்படுபவன்; ஐந்தொழில் நிகழ்த்துபவன். கடவுள், கடமையை விருப்புடன் செய்பவன் நெஞ்சுக்குள்ளேயே எழுந்தருளுகின்றான். கடமை உணர்வுடைய மனமே, கடவுள் உணர்வைப் பிரதிபலிக்கும் மனச்சாட்சி. அவன் நெஞ்சமே கடவுளின் சந்நிதி.