பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

123


வரையில் தொடரும். இங்ஙனம் உயிர்க்கு வாழ்நிலை முதலாகவும், மனத் துணையாகவும் இருந்து வாழ்க்கையை இயக்கியருள்கிறது திருவருள்!

இந்த உயிர் வாழ்க்கை, வினைச்செயல், பயன் துய்த்தல், சாதல், பிற என்று தொடர்ந்து வருகிறது. கறங்குபோல் சுற்றிச் சுற்றி வருகிறது. இதனைத் துய்த்துவரும் பொழுதுதான் வாழ்க்கை துன்பமடைகிறது. வாழ்க்கையை இன்பமாக்கினாலும் இன்பத்தின் நிழலாகத் துன்பமே தொடர்கிறது! உயிர் உற்று அனுபவிக்கும் இன்பம், துன்பம் இரண்டுமே வினைக்கு முதல். துன்பத்திற்குக் காரணம்; பிறவிக்கு வித்து. மனம் எளிதில் நிறைவு பெறாது. அவா- ஆசை, கடல் அலைபோல் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் இயல்பினது. ஒரோவழி ஆவல் நிறைவெய்தி மனம் நிறைவு கொண்டாலும் இந்த மன நிறைவு நிலையானது அல்ல. இந்த மன நிறைவும் குறைந்த காலத்திற்கே இருக்கும்; மயக்கம் பொருந்தியதாகவும் இருக்கும். மனவெழுச்சி விரிவடையும் தன்மையுடையது, ஆசை வெட்கமறியாது. மனம் தனது ஆசையை நிறைவேற்ற மட்டும் உரத்த கூச்சலிடும். மனம், தன் வயப்பட்டுக் கிடக்கும். மனிதர்களை ஆட்டிப்படைக்கும்; அடிமைப்படுத்தும்; சுதந்திரத்தைப் பறிக்கும். இதனால், உயிர் ஓயாது வினை இயற்றியும் இன்ப துன்பச் சுழற்சியில் சிக்கியும் அனுபவித்தும் அனுபவியாமலும், இந்த உலகில் ஏற்படும் அநாகரிகத் தன்மையுடையோர்களால் தாக்குண்டும் பாதிப்புக்குள்ளாகும். உயிர் செத்தும் பிறந்தும் சுற்றிச் சுற்றி வந்ததால் உடலுறு உளைச்சல், மன உளைச்சல்களுக்கு இரையாகி எய்த்துப் போகிறது; களைத்துப் போகிறது. எய்ப்பிலும் களைப்பிலும் வைப்புப் பொருள் போல் இறைவன் துணை செய்கிறான்; ‘அஞ்சல்’ என்று அருள் செய்கிறான். மந்திரமும் மருந்தும் ஆகி நின்றருள் செய்கிறான். ஆதலால், துன்பத்தின் முடிவில் எய்ப்பினில் வைப்பாக விளங்கும் இறைவனின் திருவடிகளைப் பற்றுதல் வேண்டும்.