பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

341


அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே!”

என்று பாடுகின்றார்.

கன்னிப் பெண்கள் ஆண்டான் நலனுக்கு முரணில்லாத - ஆண்டான் நலனுக்கு நலம் சேர்க்கும் வகையிலேயே வேண்டுகின்றனர். “சிவனடியார்களையே மணக்கவேண்டும்; சிவபெருமான் பணிகளையே செய்ய வேண்டும்; வேறு எப்பணியும் செய்யலாகாது” என்று வேண்டுகின்றனர். கன்னிப்பெண்களின் அடிமைத் திறத்தில் நிற்கின்றனர். எங்கள் கண்கள் நின்காட்சி தவிர, வேறு காட்சியைக் காணற்க! வேறொன்றையும் காணாத துணிவு புலப்படுகிறது. இவ்வகையால் காண்பனவும் துய்ப்பனவும், பணி செய்வனவும் பெருமானுக்கே என்ற தெளிவு பெற்றுள்ளனர். “மணமகன்”-என்றதால் இம்மைப் பயனும், ‘பணி’ என்றதால் மறுமைப் பயனும் ‘கண்ணுதற் காட்சியே காண்க’ என்றதால் வீடுபேறும் பெறுதற் குரியன.

திருவருள் நாட்டம் உடையார் காதல் திருவருள் வழியது; சுந்தரர்-பரவையார் காதல்; சுந்தரர்-சங்கிலியார் காதல் ஆகியவற்றால் அறிக! அடியாரோடு இணங்கி வாழவும், இறைவனுக்குப் பணி செய்யவும், கண்கள் அவன் காட்சியைக் காணவும் அருளப் பெற்றதால் ஞாயிறு எங்குத் தோன்றினால் என்ன? நமது நாட்டு மகளிர் குலமும் இந் நன்னெறியில் நின்றொழுகி இறுமாந்து வாழ்ந்திட நமது பிரார்த்தனை!

போற்றி யருளுகநின் னாதியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் னந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்