பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

351



இன்றைய திருக்கோயில் காட்டுகிறது. “திருப்பெருந்துறை உறையும் சிவபெருமானே! ஆண்டவனே! நீ, திரு வோலக்கம் கொண்டருளும் திருச்சபையில் ‘தான்’ அழியப் பெற்ற சிவனடியார்கள் ஞான இசையினை வீணையாலும் யாழினாலும் மீட்டுகின்றனர்; இருக்கை ஓதுகின்றனர். நின்னுடைய பொருள்சேர் புகழ்மிக்க பாடல்களைப் பாடுகின்றனர். நின் திருவடிப் போதுகளுக்கு மலர்தூவ, மலரேந்திய கைகளுடன் நிற்கின்றனர். தொழுத கையினர், நின் திருவருட் பொலிவைக் கண்டு எளிமையில் ஆட்கொள்ளும் அருளும் திறன் நோக்கி அழுகின்றனர்; கூடும் அன்பினில் கும்பிடலே குறிக்கோளாகக் கொண்டு சென்னியிற் கைகுவித்து நிற்கின்றனர். இங்ஙனம் அருள் பழுத்த மனத்தடியார் பலர் நிற்க, என்னையும் ஆண்டருள் செய்த பெருமானே! அடியேன் உள்ளத்தில் திருப்பள்ளி யெழுந்தருள்க!”

திருவடிக்கண் அன்பும் ஆசாரமும் சீலமும் இல்லாத தன்னை, ஒறுத்துத் திருத்துவதற்குப் பதிலாக ஆட்கொண்டருளி உயர்த்தும் கருணையை நினைந்து உருகி “என்னையும் ஆண்டு கொண்டு இன்னருள் புரியும்” என்று பாடிப் பரவுகின்றார். இசையில் சிவநாமத்தை இசைக்கும் பொழுது உலகுயிர்கள் ஞானத்தில் நாட்ட முறுகின்றன. சூழ்நிலையில் ஐந்தெழுத்திசைத்த ஆனாய நாயனார் அருமை நினையத்தக்கது.

இருக்கு வேதம்:- இது மந்திர வடிவானது. இறைவனுக்குத் திருமுழுக்காட்டும் பொழுது இருக்கு ஓதி ஆட்டுதல் மரபு. தோத்திரம், இறைவனைப் புகழ்ந்து பாடுதல், இருக்கு, கன்ம நெறியையும் தோத்திரம் அன்பு நெறியையும் வளர்க்கும்.

தொழுதல்:- கங்கு கரையற்ற அன்பு கரை புரண்டு வெளிப்படும் பொழுது எழுந்தும் விழுந்தும் கைகளைக்