பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இப்பூமி, சிவன் உய்யக் கொள்கின்ற புண்ணியபூமி! இறைவனுக்கு அருளே திருவுரு; திருமேனி! அதனால், ‘கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்” என்றார்.

இறைவன் ஆட்கொண்டருளக் கருணைகொண்டாலும் உயிர் திருவருளுக்கு அடிமையாதலை விரும்பினாலும் ஆட்கொண்டருளும் நிகழ்வு நிகழ்வதில்லை! எத்தனை தடைகள்! மலரெடுக்கும் சிந்தனையைச் செய்தித்தாள் தடுக்கிறது! அகனமர்ந்த பூசனையில் குறுக்கிடுகிறது. தொலைபேசியின் அலறல்! ஐந்தெழுத்தை எண்ணும் முயற்சியில் அன்பர்கள் குறுக்கீடு! ‘பெருமானைப் பூசிக்க’ தபால் பெட்டி தடையாக வருகிறது! இவ்வளவும் புறத் தடைகள்! அகத்தே இப்பொழுதென்ன? சில நாள் போகட்டும் என்று எண்ணுகிறது!

பணியும் பூசைதானே என்று கருதுகிறது. இன்று என்ன? திருவிழா வரட்டுமே என்று தோன்றுகிறது! இத்தனை தடைகளையும் தாண்டி உயிர் ஆட்பட வேண்டும்; அவன் ஆட்கொள்ள வேண்டும். தடைகளை நீக்கி அவன் ஆட்கொள்வான் என்பதனை “ஆட்கொள்ள வல்லாய்!” என்றார். “வல்லாளன் தென்னன் திருப்பெருந்துறையான் ஆட்கொண்டருளத் திருப்பள்ளியெழுந்தருளியுள்ளான்! வழிபடுவோம்! வாரீர்!

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறையறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்


திருச்சிற்றம்பலம்