பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21


எல்லை கடந்த பொருள்!


கடவுள் எங்கே? அவர் எப்படி இருப்பார்? கண்ணால் காணக் காட்ட முடியுமா? - என்ற வினாக்கள் இன்று பிறந்தன அல்ல. கடவுள், பழம் பொருள்! வினாக்களும் பழமையானவையே! விடை காண முடியாத வினாக்கள்! விடையே காண முடியாத வினா உண்டா? உண்டு!

விடையே காண முடியாத வினா உண்டு என்பதே அறிவியலின் அடிப்படை! இடையில் விடை என்ற பெயரில் சில விடைகள் தோன்றலாம். அவையே முடிவான விடைகளா? என்ற வினாத் தோன்றும்; இங்ஙனம் வினாவும் விடையுமாகச் சுழன்று வளருவது அறிவியல். திருவள்ளுவரும் “அறிதோறறியாமை” என்பார்.

ஐம்பூதங்களை அறியும் அறிவியலிலேயே அறியாமை இருக்கிறது. கண்ணால் காண்பன, உடலால் உற்றறிவன - இவற்றிலேயே இன்னமும் முழுநிலை கண்டபாடில்லை! இவற்றைக் கடந்த கடவுளைப் பற்றி ‘காண்க’ என்பதும் ‘காட்டுக’ என்பதும் ‘காட்டுவேன்’ என்பதும் சிறுபிள்ளை விளையாட்டேயாம்.