பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

31


சிவபதம் அளித்த செல்வம்

மானிட வாழ்வில் அம்மா, அப்பா இவர்களில் யார் முதன்மை பெறுகின்றனர்? இது ஒரு விவாதம். இந்த விவாதத்திற்குச் சைவம் விடையளித்ததுபோல யாரும் விடையளிக்கவில்லை. நெருப்பும் சூடும்போல, பண்பும் பண்பியும் போல அம்மா, அப்பா நிலை.

சைவம் அம்மையப்பரை ஒருருவமாகவே மொழிகிறது. “அம்மையப்பரே உலகுக்கு அம்மை யப்பர்” குமரகுருபரர் அம்மையப்பன் நிலையை இலக்கண நயத்துடன் வியப்பு மேலிட விளக்குவார்.

ஒருவன் என்கோ? ஒருத்தி என்கோ? இந்த இடர்ப்பாடு தமிழுக்கு இல்லை. தமிழில் இருவரையும் குறிப்பிடும் “ஒருவர்” என்ற பலர்பால் குறிக்கும் இயற்சொல் இருக்கிறது என்பார்.

“ஒருவனுக்கும் ஒருத்திக்கும்
உருவொன்றால் அவ்
வுருவையிஃ தொருத்தன் என்கோ?
ஒருத்தி என்கோ?
இருவருக்கும் உரித்தாக
“ஒருவர்” என்றோர்
இயற்சொல் இல தெனை யானமற்று
என் சொல் கேளே!

(சிதம்பரச் செய்யுட் கோவை 54: 3-4)

திருமுறைகள் முழுவதும் அம்மையப்பன் வழிபாடே பேசப் பெறுகிறது. அப்பரடிகள்,

“அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ”

என்று அப்பனை, ஐயனை, சிவனை முதல்நிலையில் வைத்துப் பேசுகின்றார், ஏன்?