பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை


காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கையிலேயே,நேரிடும் சிலபல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்துவிடுகின்றன.

'குமரிக்கோட்டம்' இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம்.

இதிலே காணப்படும் சீறும் தந்தை, வாதிடும் மகன், வசீகர மங்கை, ரோஷம் நிரம்பிய அண்ணன், இவர்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் காணலாம். பெயர்கள், குழந்தைவேலர் என்றிராது; குமரி என்று இருக்காது. ஆனால், இவ்விதமான நிலைமையிலுள்ளவர்களை, நாட்டிலே காண முடியும்.

மகன் தலைகால் தெரியாமல் ஆடுகிறான், ஜாதி ஆச்சாரத்தைக் கெடுக்கிறான் என்று சீறுகிறார் தந்தை. அவரால், காதல், ஜாதிக் கட்டுப்பாடுகளை மீறக்கூடிய சக்தி என்ற உண்மையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மகன் அழுதபோதும் சரி, அவன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகுங்கூட நெடுநாட்கள் வரை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை——ஒரு களங்கமற்ற கன்னியின் புன்னகையைக் காணும் நாள்வரை.