பக்கம்:குற்றால வளம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

வகுப்பு

 அவரவர் தொழிலைப் பார்த்துப் புதிய வகுப்புக்கள் காண்டல் வேண்டும். சில் பல ஆண்டுகள் சென்று திரும்பவும் இன்றைய நிலையையே உறும். அன்றி, ஒருவர் அந்தணர்க்குரிய தொழில் பலவும் வணிகர்க்கோ மற்றவர்க்கோ உரியவுமான தொழில் பலவும் செய்தல் கூடும். அவரை எவ்வகுப்பிற் சேர்ப்பது? இன்னோ சின்ன சங்கடங்கள் . நேர்வதால் இவ்வகுப்பை ஒர் பெரும் பொருளாகக் கொள்ளவேண்டாம். அந்தந்தத் தொழில் ஆற்றுங்கால் அவ்வவ் வகுப்போடு சேர்ந்து கொள்ளட்டும். மணம் உணவு முதலியவற்றிற்கும் வகுப்புக்கும் சம்பந்தமில்லை.

இந்நாள் பொருளற்ற முறையில் வகுப்பைக் கொள்வதனால் ஏற்படும் பூசல்கட்கு ஒர் எல்லை இல்லை. எனவே வகுப்பின் நீர்மையை உள்ளவாறுணர்ந்து மெய்வழிபற்றினாலன்றி இப்பூசல்கள் ஒழியா. நமது நாடு இவ்வகுப்புப் பூசலால் பெரிதும் கெட்டுவருகிறது. ஒரு குலத்திற் பிறந்தமையினாலே அவர்தீண்டத்தகாதார் என ஒரு பெருங் கூட்டத்தார் ஒதுக்கப்படுதல் போன்ற அறியாமை வேறு என்னிருக்கிறது? அவரை ஆலயங்கட்குள் விடுவதில்லை யென்பது மூடித்தனமன்றோ? நமது ஹிந்துமக்கள் பெரிதும் மூட வழியிலேயே கிடந்துழல்கின்றார். உலகம் போற்றும் காந்தியடிகளையும் நுழைய விடாமல் தடுத்தார்கள் முன் ஒரு கோவிலில் காரணம் அப்பெருமான் கப்பலேறிக் கடல் கடந்து லண்டன் போய் வந்தமை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/103&oldid=1321709" இலிருந்து மீள்விக்கப்பட்டது