பக்கம்:குற்றால வளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

உலக இயல்பு


தோன்றி நாட்கள் பலவாயினமையின் பிரிக்கப்பட்ட உண்மையை மறந்து வேறு வகையாகப் பொருள் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். தொழில் வேறு செய்துகொண்டு, வேறு பிரிவில் சேர்ந்துகொள்ள விரும்புகின்றனர். இவ்வுண்மையை நிலைநாட்ட இப்பொழுது பல அறவோர் தோன்றியுள்ளார். தொடக்கத்தில் நன்னோக்கத்தோடு அறமெனக்கருதியே வகுப்புப் பிரிவை உண்டுபண்ணினார். இந்நாள் அது சங்கடத்தில் வந்து முடிந்துவிட்டது. இப் பொழுது அம்முறையைத் தொலைக்க வேண்டியதிருக்கிறது. இன்று தொலைத்துவிட்ட போதிலும் இனி அது என்றும் சரியாக நடந்து வரும் என்பதற்கில்லை. இன்னும் பன்னாட்கள் ஆனவுடன் இற்றை நிலையையே எய்தும். பிறகு இதில் சீர்திருத்தஞ்செய்ய வேண்டுவது தான்.


மதக்குறிகளை எடுத்துக்கொள்ளலாம். மதம் என்பதற்கே கொள்கை என்பதுதான் பொருள். ஒவ்வொரு கொள்கையாரும் அடையாளங் தெரிந்து கொள்வதற்காகச் சில சில குறிகளைக்கொண்டனர். நாளடைவில் உள் கொள்கைகள் மறைந்தொழிய அவைகளை மறந்து வெளிக் குறிகளையே முக்கியமாகக் கொள்ளும் நிலைவந்துவிட்டது. தொடக்கத்தில் இக்குறிகள் காணப்பெற்றது நன்னோக்கங் கொண்டுதான். இன்று கொள்கையை அழித்தும் குறியைக் காக்கும் நிலை வந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/33&oldid=1293883" இலிருந்து மீள்விக்கப்பட்டது