108
கெடிலக்கரை நாகரிகம்
புதுப்புனல் பெருக்கெடுத்து ஓடிவரும் மிடுக்கை அப்படியே சொல்லோவியப்படுத்திக் காட்டியுள்ளார் திருப்புகழார். மிடுக்கிற்கேற்ற சந்தம் பாடலில் அமைக்கப்பட்டுள்ளது. இப் பாடலை உரிய சந்தத்துடன் திரும்பத் திரும்பப் பாடுவோமாயின், புதுவெள்ளம் உண்மையிலேயே கமுகின் தலையை இடறுவது போலவும், வாழைக் குலையைச் சிதறுவது போலவும், கதிரை அலைப்பது போலவும், திரை மோதுவது போலவும், ‘திமிதிம்’ எனப் பறை முழக்குவது போலவும் உணர்ந்து வியந்து மனவெழுச்சி (Emotion) கொள்வோம்.
இலக்கணம் சிதம்பரநாத முனிவர் தாம் இயற்றிய திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில் பல விடங்களில் கெடிலத்தைக் குறிப்பிட்டுள்ளார்; சில வருமாறு:
தலவிசிட்டச் சருக்கம்
“துங்க வாவியே யயிந்திரம் கெடிலமேற் சொல்லும்” பாடலேச்சுரர் சித்தராய் விளையாடிய சருக்கம்
“சந்தனத் துருமங்களு மகில்களுஞ் சரளச்
சுந்தரத் துருமங்களுந் தொலைவில் பல்வளனுஞ்
சிந்துரத் துருக்கேசரி வயப்புலித் திரளுங்
கொந்து கொந்ததாய்க் கெடிலமா நதிகொணர் தருமால்” (33)
‘வாரி முத்தமுங் கயமருப் பற்புத மணியும்
வாரி மிக்கெழுங் கெடிலமா நதியள்ளி வந்து
வாரி மிக்கபல் கலன்களு மேற்றுதல் மான
வேரி மிக்கநீர்க் காலென வெதிர்தரு மேல்வை.” (34)
“கெடில மாநதி பாடலேச் சுரனிகே தனத்தின்” (45)
“கெடில மாநதி சேய்த்ததாய்க் கெழுமுவதன்றி” (54)
உயரிய நறிய மரங்களையும் கொடிய காட்டு விலங்குகளையும் விலையுயர்ந்த பல்வேறு மணிகளையும் கெடிலம் உருட்டிக் கொண்டுவந்து கடலிலுள்ள கப்பல்களில் ஏற்றுமதி செய்வதுபோல் தோன்றுவதாகப் புலவர் புனைந்துள்ளார். இவரும் கெடிலத்தை ‘மாநதி’ எனச் சிறப்பித்துள்ளார்.