பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

கெடிலக்கரை நாகரிகம்


சகந்நாத நாடு

இதே நாட்டிற்கு ‘சகந்நாத நாடு’ என்னும் பெயரும் வழங்கப்பட்டதை, திருக்கோவலூர்க் கல்வெட்டொன்றிலுள்ள

"மலாடான ஜகந்நாத வளநாட்டுக் குறுக்கைக்
கூற்றத்துத் திருக்கோவலூர்

என்னும் பகுதியால் அறியலாம். சனநாத நாடு என்பது சகந்நாத நாடு எனத் தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டதோ - அல்லது சகந்நாத நாடு என்பது சனநாத நாடு என மாற்றி வழங்கப்பட்டதோ - தெரியவில்லை. இரண்டும் தனித்தனிப் பெயராகவும் இருக்கலாம்.

இவ்வாறு கெடில நாட்டிற்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டன. இப்பெயர்களுள், சங்ககாலத்தில் மலாடு என்னும் பெயரும், சங்க காலத்திற்குப் பின் திருமுனைப்பாடி நாடு என்னும் பெயருமே வழக்காற்றில் பெரிதும் இடம் பெற்றன என்பது நினைவுகூரத் தக்கது.

உலக எல்லைக்குள் கெடில நாடு

கெடிலம் பாயும் தென்னார்க்காடு மாவட்டம் உலக எல்லைக்குள், வடகுறுக்கைக் கோடு (North Latitude) 11°5’ - 12°30’ ஆகிய அளவிற்குள்ளும், கிழக்கு நெடுக்கைக் கோடு (East Longitude) 78°37’ -80’ ஆகிய அளவிற்குள்ளும் அமைந்து கிடக்கிறது. இந்தப் பொது எல்லைக்குள்ளேயே, கெடிலம் பாயும் கள்ளக்குறிச்சி வட்டம், திருக்கோவலூர் வட்டம், கடலூர் வட்டம் ஆகிய மூன்று வட்டங்களும் அடங்கிய கெடில நாடு, வடகுறுக்கைக் கோடு {North Latitude) 11°30’ - 12°10’ ஆகிய அளவிற்குள்ளும், கிழக்கு நெடுக்கைக் கோடு (East Longitude) 78°40’ - 79°50’ ஆகிய அளவிற்குள்ளும் அமைந்துள்ளன. இது, உலக எல்லைக்குள், சிறப்பாகக் கெடில நாடு அமைந்திருக்கும் இட எல்லையாகும்.