பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

187


வடலூர் வள்ளலார்

உலகில் கோடிக்கணக்கான மக்கள் தோன்றுகின்றனர் வாழ்கின்றனர் - மறைகின்றனர். அவர்களுள் தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்னும் வள்ளுவர் வாய்மொழிப்படி புகழோடு தோன்றி வாழ்ந்தவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் மிகச் சிலரேயாவர். அனைத்துலகையும் ஆட்டிப் படைத்த அரசர்கள், மாமல்லர்கள், மாபெருஞ் செல்வர்கள், இன்ன பிறரும் வரலாற்று நூல்களில் பொறிக்கப்பட்ட்தோடு நின்று மறைந்து விடுகின்றனர். ஆனால், வள்ளல்கள், சமய குரவர்கள், புலவர்கள், புரட்சி எழுத்தாளர்கள் ஆகியோர் மட்டும் என்றும் மறைவதில்லை.

பாரி, குமணன், நோபெல், ராக்பெல்லர் முதலிய வள்ளல்கள் தாம் செய்த அறங்களாலும், புத்தர், ஏசு, முகமது நபி, நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமய குரவர்கள் தாம் நிறுவிய திருநெறிகளாலும், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், காளிதாசர், சேக்சுபியர், விக்தோரிகோ முதலிய புலவர்கள் தாம் படைத்த இலக்கியங்களாலும், சுப்பிரமணிய பாரதியார், ரூசோ போன்ற புரட்சி எழுத்தாளர்கள் தம் புரட்சிக் கருத்துக்களாலும் மக்கள் உள்ளங்களில் என்றும் நின்று நிலைத்துள்ளனர். மாபெரும் புகழ்ச்சிக்கும் வணக்கத்திற்கும் உரிய இத்தனை தரத்தாரின் இயல்புகளும் சிறப்புக்களும் ஒரு சேரப் பெற்றுத் திகழ்ந்தவர் வடலூர் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளாராவார். ஆம்! இவர் ஒரு வள்ளலாகவும் சமய குரவராகவும் புலவராகவும் - புரட்சியாளராகவும் மிளிர்ந்தார்.

இத்தகு மாபெரும் பெரியார் இராமலிங்கர், தென்னார்க்காடு மாவட்டத்தில் தில்லைக்கு வடமேற்கே உள்ள மருதூர் என்னும் ஊரில், இராமையா பிள்ளை - சின்னம்மை என்பார்க்கு 5-10-1823ஆம் நாள் பிறந்தார். இளமையிலேயே தந்தையை இழந்த இவர் தமையனார் ஆதரவில் இருந்து வந்தார். இவர் பள்ளிப் படிப்பில் போதிய திறமை காட்டாததால் தமையனார் கடிந்து கொண்டதுமுண்டு. இவர் தமையனாருடன் சென்னையில் இருந்தபோது, சென்னை முத்தியாலுப் பேட்டையில் தமையனார் ஆற்றவிருந்த சொற்பொழிவிற்கு அவர் வரமுடியாமற் போகவே, அவருக்குப்பதில் இவர் சென்று சிறந்த முறையில் சொற்பொழிவாற்றினார். அதிலிருந்து இராமலிங்கர் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது. பின்னர், இவர் சென்னையிலிருந்து சிதம்பரம் வந்து தங்கினார்.