பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17. பக்கத்து வீட்டுப் பணக்காரி

கெடிலத்தாளின் பக்கத்து விட்டில் ஒரு பணக்காரி இருக்கிறாள். இந்தப் பணக்காரி கெடிலத்தாளைவிட ஒரு சிறிது கூடுதலாக விளம்பரம் பெற்றுள்ளாள். அதற்குக் காரணம், அவள் கெடிலத்தாளினும் கூடுதலான உயரமும் பருமனும் உடையவளாயிருப்பதே. அவளுடைய செல்வம் என்பது இந்த உயரமும் பருமனுந்தான். பணக்காரியாகிய அவள் பக்கத்திலிருப்பதால், சில நேரங்களில் சிலர் கண்களுக்குக் கெடிலத்தாள் தென்படாமல் போய்விடுகிறாள். ‘பணக்காரரைச் சுற்றிப் பத்துப்பேர் இருப்பார்கள்’ என்பது பழமொழி யாயிற்றே! இதனால், திருமுனைப் பாடி நாட்டைப் புகழத் தொடங்கிய புலவர்களுள் சிலர் அந்தப் பணக்காரியின் பக்கமே பார்வையைச் செலுத்தியுள்ளார்கள். சங்க இலக்கியங்களில் கூட அப் பணக்காரிதான் இடம் பெற்றுள்ளாள். இருப்பினும், சங்க இலக்கியங்கட்குப் பிற்பட்ட பெரிய இலக்கியங்கள் பலவற்றில், தனது உயர்ந்த தன்மையாலும் வன்மையாலும் கெடிலத்தாளும் பரவலாக இடம்பெற்றுப் பாராட்டப்பட்டுள்ளாள்.

கெடிலத்தாளின் பக்கத்து வீட்டுப் பணக்காரியின் பெயர் தென்பெண்ணையாறு என்பது. மக்கள் இதனைப் பெண்ணையாறு என்றே அழைப்பர். இந்தத் தென்பெண்ணை, மைசூர் மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் நந்திதுர்க்கத்திற்கு வடகிழக்கே சன்னராயன் ப்ெட்டாவில் தோன்றுகிறது; கோலார் மாவட்டத்திலிருந்து வந்து பெங்களுர் மாவட்டம் வழியாகத் தமிழ் மாநிலத்தில் சேலம் மாவட்டத்திற்குள் புகுகிறது. பின் அம்மாவட்டத்தைக் கடந்து வடார்க்காடு மாவட்டத்தின் தென்மேற்கு மூலையில் புகுந்து செங்கம், திருவண்ணாமலை வட்டங்களின் வழியாக வந்து தென்னார்க்காடு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி வட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டித் திருக் கோவலூர் வட்டத்தில் புகுகிறது; திருக்கோவலூர் - விழுப்புரம் - கடலூர் ஆகிய வட்டங்களின் வழியே சென்று கடலூருக்கு வடக்கே 4. கி.மீ. தொலைவில் வங்காளக் குடாக்கடலில் கலக்கிறது. பெண்ணையாற்றின் நீளம் 400 கி.மீ. (250 மைல்) ஆகும்.

கெடிலமும் பெண்ணையும் திருக்கோவலூரிலிருந்து கடலூரில் கடலில் கலக்கும் இடம் வரைக்கும் பக்கத்தில் -