பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

359


“மகிழ்ந்து வாழும் போதிவை நாம் பொன்னயிந்தை
நகரில் முன்னாள்”

"அயிந்தை மாநகரில் அமர்ந்தனை எமக்காய்”

எனத் திருவயிந்திரபுரத்தை நகர் - மாநகர் எனச் சிறப்பித்துக் கூறியிருப்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. இதைக் கொண்டு, அந்தக் காலத்தில் திருவயிந்திரபுரம் ஒரு சிறந்த நகராய் விளங்கியதென அறியலாம்.

திருவயிந்திரபுரச் சீமையை ஆங்கிலேயர்கள் 1749ஆம் ஆண்டு ஆர்க்காடு நவாப்பிடமிருந்து 28,000 ரூபாய்க்கு வாங்கினர். வடமொழியும் தென்மொழியும் பயின்று வந்த திருவயிந்திரபுரம் வைணவ அந்தணர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலமும் பயிலத் தொடங்கினர். அதன் பயனாய்ப் பல குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறிடங்களில் இன்று அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கின்றனர். ஊருக்கு அன்று இருந்த பொலிவு இன்று இல்லையென்றே சொல்லலாம். இந்த ஊரில் வடகலை வைணவர்களும் தென் கலை வைணவர்களும் பிணங்கி நீதிமன்றம் வரையும் சென்று வழக்கிட்டுக் கொண்டதுண்டு. சென்னப்ப நாயக்கன் பாளையத்தைப் போலவே இவ்வூரிலும், கிழக்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள கடலூர்ப் பகுதியைக் ‘கிழக்கு’ என்னும் திசைப் பெயரால் சுட்டும் வழக்கம் உள்ளது; அதாவது, ‘கிழக்கே போகிறேன்', ‘கிழக்கே போயிருக்கிறார்’ என்னும் வழக்கை இவ்வூரிலும் காணலாம். இவ்வூர் கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்துள்ளது.

இவ்வூரில் கெடிலத்தில் அணை கட்டப்பட்டிருப்பதால் வளத்திற்கும் குறைவில்லை. இவ்வூர் மலையிலும் மலையடிவாரத்திலும் வெள்ளைக் களிமண் படிவம் இரண்டறக் கலந்துள்ளது. வெள்ளைக் களிமண் வெட்டியெடுக்கப்பட்டு, உரம் செய்வதற்காகக் கூடலூரிலுள்ள தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் திருவயிந்திரபுரம் புகழ் பெற்றுத் திகழ்கிறது.

கடலூர்ப் பெருநகரம்

சென்னைக்கு நேர் தெற்கே 160 கி.மீ. (100 கல்) தொலைவிலுள்ள கடலூர் முதல் தரமான ஒரு பெரிய நகரமாகும். கெடிலம் ஆறு கடலுர் நகரைச் சுற்றி வளைத்து