பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

கெடிலக்கரை நாகரிகம்



திருச்சோபுரம் (தியாகவல்லி)

இவ்வூர் கடலூருக்குத் தெற்கே 17 கி.மீ. தொலைவில் கடற்கரையில் உள்ளது. பரவனாறு என்னும் உப்பங்கழியைப் படகு ஏறிக் கடந்து இவ்வூருக்குச் செல்ல வேண்டும். கூடலூர் - மாயவரம் புகைவண்டிப் பாதையிலுள்ள ஆலப்பாக்கம் புகைவண்டி நிலையத்திற்கு வட கிழக்கே 3 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது; கடலூர் - சிதம்பரம் பேருந்து வண்டிப் பாதையிலும் ஆலப்பாக்கம் அகப்படும்.

இவ்வூர்ச் சிவன்கோயில் திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகம் பெற்றது. இறைவன்: சோபுரநாதர்; இறைவி: சோபுரநாயகி. திருச்சோபுரத்திற்குத் தியாக வல்லி என்னும் பெயரும் உண்டு; இந்தப் பெயர்தான் வழக்கில் உள்ளது. திருச்சோபுரம் என்னும் பெயர் தேவார வழக்கு. தியாகவல்லி என்னும் அரசியின் பெயரோடு இவ்வூர் தொடர்புபடுத்தப் பட்டிருக்கிறது. அந்த அரசியின் உருவத்தைச் சிவன் கோயிலில் காணலாம்.

திருச்சோபுரம் கோயில், இருக்குமிடம் தெரியாமல் பல காலம் மணலால் மூடப்பட்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. மாடு மேய்த்த சிறுவர்கள் ஒரு மணல்மேட்டில் ஒரு கலசம் தெரிவதைத் தற்செயலாய்க் கண்டு சொல்ல, பின்னர்க் கோயில் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ தம்பிரான் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தேவாரத்தில் இந்தக் கோயில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கொண்டு, இந்தப் பகுதியில் ஒரு கோயில் இருக்க வேண்டும் என அவர் கூறியிருப்பார்; பின்னர்க் கோயில் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். சென்னப்ப நாய்க்கன் பாளையத்தின் உடைமையாளர்களாயிருந்த குமரப்ப நாய்க்கரும் அவர் மகன் சங்கர நாய்க்கரும் கோயிலை முடியிருந்த மணலைத் தோண்டி அப்புறப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ததாகச் சொல்லப்படுகிறது. இக்கோயிலில் சோழர்-பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகள் சில உள்ளன. இவ்வூர் மக்கள் தொகை: 2250.

திருத்தினை நகர்

தேவாரத்தில் திருத்தினைநகர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்வூர், பேச்சு வழக்கில் ‘தீர்த்தன கிரி’ என்று அழைக்கப்படுகிறது. இது, கடலூருக்குத் தென்மேற்கே 19 கி.மீ. தொலைவில் ஆலப்பாக்கம் புகைவண்டி நிலையத்திற்குத்