'நர்ஸ்' நாகமணி'
அவளுடைய சுறுத்த மேனிக்கு அந்த வெள்ளை கவுன் 'பளிச்' சென்று இருக்கும். தலையைப் பின்னிக் கொண்டையாக வளைத்துக் கட்டி நர்ஸுக்குரிய பட்டையான வெள்ளைத் துணியை அதன் மீது செருகியிருப்பாள்.
இரு கைகளையும் அடிக்கடி கவுன் பாக்கெட்டுகளில் விட்டுக்கொண்டு 'வார்டு பாய்'களை விரட்டியபடியே 'டக்டக்' கென்று நடந்து செல்வாள்.ஆங்கிலமும் கொச்சைத் தமிழும் கலந்த மணிப் பிரவாள நடையில் கீச்சுக் கீச்சென்று கத்தி வார்டையே அதிரச் செய்வாள்.
"ஏ, முனுசாமி! இத்தினி நேரம் எங்கே போயிருந்தே! நீ வரவரக் கெட்டுப் போச்சு. வராண்டா கிளீன் பண்லே; ஏழாம் நெம்பர் பெட் மாத்தலே. இரு இரு டாக்டர் கிட்டே சொல்லி உனக்கு 'பய்ன்' போட்டு வெக்கிறேன். அப்பத்தான் புத்திவரும் உனக்கு. போய் அந்த 'சிரிஞ்சு' எடுத்துக்கிட்டு வா...டயம் என்ன ஆச்சு தெரியுமா? டாக்டர் வந்தா யாரு டோஸ் வாங்கறது? உனக்கு மூளை இல்லே?..."
"நர்ஸியம்மா..." நோயாளி ஒருவருடைய குரல் இது.
"யாரது கூப்டறது? ஏன் தொந்தரவு பண்றே?" மறுபடியும் ஓர் அதட்டல்.
"நான் தாம்மா... நாலாம் நெம்பர் பெட்...