பக்கம்:கேரக்டர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

வசனகர்த்தா டி. என். ராவுக்கு ஐம்பது ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து 'அத்தைக்கு மீசை முளைத்தால்?' என்னும் ஒரு சமூகக் கதையை விலைக்கு வாங்கினான். அந்தத் தலைப்பு சரியில்லை என்பதற்காக 'வீட்டுக்கு ஒரு அத்தை!' என்று அதன் பெயரை மாற்றினான் மயில்சாமி. அதுவும் சரி யில்லை என்று 'அத்தையின் வீடு' என்று மறுபடியும் அந்தப் பெயரை மாற்றிவிட்டார் டைரக்டர்.

படத்துக்குப் பூஜை போட்டாயிற்று. ஐயாயிரம் ரூபாயில் ஸெகண்ட் ஹாண்ட் கார் ஒன்றும் விலைக்கு வாங்கியாயிற்று. இதற்குள் ரூபாய் இருபத்தைந்தாயிரம் அவுட்டாயிற்று. ஏகாம்பரத்தின்' கையிலிருந்த பணமெல்லாம் கரைந்து விடவே மயில்சாமியைப் பார்த்து, "பணத்துக்கு என்னடா செய்வது?" என்று கேட்டான் ஏகாம்பரம்.

"கிண்டியிலே வாங்கித் தரேன் வாடா” என்று சொல்லி அவனை ரேஸுக்கு அழைத்துச் சென்றான் மயில்சாமி. ரேஸில் மேலும் இரண்டாயிரத்தைத் தொலைத்ததுதான் மிச்சம்.

ஏகாம்பரத்தின் பணம் அடியோடு தீர்ந்துவிட்டது என்று தெரிந்ததும் மயில்சாமி மாயமாய் மறைந்து விட்டான்.

'அத்தையின் வீடு' எடுக்கப்போன ஏகாம்பரம் ஹேமலதாவின் வீடே கதியாகிவிட்டான். அதுமட்டுமல்ல. அவளையே அவன் ரிஜஸ்தா விவாகம் செய்துகொள்ள வேண்டியதாகிவிட்டது.

இப்போது ஹேமலதா ஷூட்டிங்குக்குப் போகும் போதெல்லாம் பாவம், ஏகாம்பரமும் கூடவே போய்க் கொண்டிருக்கிறான். ஒருவேளை என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு ஸ்டூடியோவில் தன்னைப் போன்ற ஓர் ஏமாளியுடன் மயில்சாமியைச் சந்திக்கலாம் என்ற எண்ணம் தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/69&oldid=1479452" இலிருந்து மீள்விக்கப்பட்டது